Home Featured நாடு எண்ணெய் பீப்பாய்க்குள் இருப்பது கெவின் மொராய்ஸ் சடலம்தான்!

எண்ணெய் பீப்பாய்க்குள் இருப்பது கெவின் மொராய்ஸ் சடலம்தான்!

708
0
SHARE
Ad

Kevin Moraisசுபாங் – இன்று காலை சுபாங்கில் கண்டெடுக்கப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருக்கும் சடலம் கெவின் மொராய்ஸ்தான் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி முதல், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த கெவின் மொராய்ஸ் பின்னர் பங்சார் பகுதியிலிருந்து கடத்தப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.

எண்ணெய் பீப்பாயில் கான்கிரிட் சிமெண்ட்டில் உறைந்த நிலையில் காணப்பட்ட ஒரு சடலம் இன்று காலை சுபாங் ஜெயாவில் உள்ள யுஎஸ்ஜே 1 வீடமைப்புப் பகுதியில், பெர்சியாரான் சுபாங் மெவா சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இதன் அருகில்தான் கிள்ளான் ஆறு இருக்கின்றது.

#TamilSchoolmychoice

முதலில் எண்ணெய் பீப்பாய்க்குள் இருக்கும் சடலம் கிள்ளான் ஆற்றுப் பகுதியில்தான் கண்டெடுக்கப்பட்டது என்றும் பின்னர் முக்குளிப்பு வீரர்கள் ஆற்றுக்குள் குதித்து சடலம் பீப்பாய்க்குள் இருப்பதை உறுதிப்படுத்தி, அதனை மீட்டனர் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் முகமட் சாலே தெரிவித்திருக்கின்றார்.

ஒரு பளுதூக்கி இயந்திர வாகனம் பின்னர் அங்கு கொண்டு வரப்பட்டு அதன் மூலம், அந்த எண்ணெய் பீப்பாயை காவல் துறையினர் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

பீப்பாய் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே பத்திரிக்கையாளர்களை காவல் துறை நிறுத்தி விட்டாலும் சடலத்தில் இருந்து புறப்பட்ட பிணவாடை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்ததாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையின் மூத்த அதிகாரிகள் சிலரும் அந்த இடத்தில் காணப்பட்டனர்.