மும்பை – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மீண்டும் தாய்மதமான இந்து மதத்திற்குத் திரும்பி வர அழைப்பு விடுத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு.
ஏ.ஆர்.ரகுமான் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர் ஆவார்.
பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ‘முகம்மது மெசஞ்சர் ஆஃப் காட்’ என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பது இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக ஃபத்வா விதித்தது.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்” என்று டுவிட்டரில் உருக்கமாகப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தாய்மதத்திற்குத் திரும்புவதற்கான நேரம் இதுவே” என்று அவரை இந்து மதத்திற்குத் திரும்புமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியிருப்பதாவது: “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது. அவர் அந்தப் படத்திற்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல.
எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காகக் காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம்” என்று அவர் அழைப்புவிடுத்துள்ளார்.




