செர்டாங் – நேற்று பிற்பகல் நடைபெற்ற மஇகா 67வது பொதுப் பேரவையில் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக தனது முதல் கொள்கையுரையை ஆற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்திய சமுதாயம், மஇகா குறித்த பல அரசியல் விவகாரங்களை பிரதமர் முன்னிலையில் எடுத்துக் கூறினார்.
அரசியல் ரீதியாக மஇகாவை உருமாற்றுவது அவரது கொள்கையுரையில் மையக் கருத்தாக இழையோடியது. நேரம் கருதி, தனது உரையை மலாய் மொழியில் மட்டும் வழங்குவதாகக் கூறிய சுப்ரா, தனது உரையின் முக்கிய நோக்கம் அதன் உள்ளடக்கம் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்வதுதான் என்றும் கூறியிருந்தார்.
அவரது விரிவான கொள்கை உரையின் ஆங்கில, மலாய், தமிழ் வடிவங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு சிறு நூலாக அச்சடிக்கப்பட்டு பேராளர்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன.
கட்சியை உருமாற்றுவோம்
இரண்டு முனைகளில் செயல்படுவதை உறுதி செய்யும் வண்ணம் கட்சியைத் தயார்ப்படுத்த தாம் முனைந்துள்ளதாக தனது உரையில் தொடக்கத்தில் கூறிய சுப்ரா,
(1) அரசியல் ரீதியாக 2018ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மஇகா அத்தியாவசியமானக் கட்சியாக உருவெடுக்க வேண்டும்;
(2) இந்தியர்களின் தற்போதைய பொருளாதார, சமூக சீர்கேடுகளிலிருந்து விடுபடச் செய்து, அவர்களை மேலும் உயர்த்துவதற்கான இன்னும் விரிவான செயல்திட்ட அட்டவணை ஒன்றை மேலும் முனைப்புடன் செயல்படுத்துவது;
அரசியல் ரீதியான பல சீர்திருத்த மாற்றங்கள், உருமாற்றங்கள் ஆகியவற்றின் வழியாக, மேற்கண்டவற்றை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.
மஇகாவை அனைவருக்காகவும் திறந்து விடுவோம்
மற்ற சிறு கட்சிகளை ஒன்றாக இணைப்போம்
இந்திய சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவ நிலையைப் பொறுத்தவரை, இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதப்பதாகக் கூறிக் கொண்டு, பல்வேறு சிறு சிறு கட்சிகளாக சிதறுண்டு அவர்கள் இருப்பது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கின்றது என்றும் தெரிவித்த சுப்ரா, நாட்டின் மிகப் பழமையான, மிகப் பெரிய கட்சி என்ற முறையில், மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்க ஒரு வெளிப்படையான கருத்துப் பரிமாற்றக் களம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இதற்காக மற்ற கட்சிகளை எங்களோடு ஒன்றிணைவதற்கு அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்.
மலேசிய இந்திய ஆலோசனை மன்றம் அமைக்கப்படும்
அத்துடன், நமது கட்சிக்கும், சமுதாயத்திற்கும் இடையே உறவுப் பாலமாகச் செயல்பட மலேசிய இந்திய ஆலோசனை மன்றம் ஒன்றையும் அமைக்கவிருப்பதாக சுப்ரா தனது கொள்கையுரையில் குறிப்பிட்டார்.
கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை திரும்பவும் சேர்ப்போம்
அது மட்டுமல்லாமல், மாறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளினால், நடந்து முடிந்த கட்சியின் மறு தேர்தல்களில் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த கட்சியின் எல்லா நிலைகளிலும் இருக்கும் நமது மஇகா உறுப்பினர்கள் இந்த மாநாடு முடிவடைந்ததும், அவர்கள் மீண்டும் கட்சிக்குள் திரும்பி வந்து சேர்வதற்கு அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்களும் நமது கட்சியோடு இணைந்து, கட்சி நடவடிக்கைளில் மீண்டும் அவர்கள் பணியாற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம் என்றும் சுப்ரா பிரதமர் முன்னிலையில் அறிவித்தார்.
-செல்லியல் தொகுப்பு