Home Featured நாடு நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்குத் தடை!

நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்குத் தடை!

635
0
SHARE
Ad

கூச்சிங் – ஏற்கனவே சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்கும் இன்று சரவாக் குடிநுழைவுத் துறை அனுமதி மறுத்தது. இந்த அனுமதி மறுப்பை சரவாக் முதலமைச்சர் அலுவலகம் விடுத்ததாக நம்பப்படுகின்றது.

இன்றிரவு சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கில் நடைபெறவிருக்கும் ஒரு பிகேஆர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நூருல் இசா மற்ற பிகேஆர் தலைவர்களுடன் வருகை தந்தார். விரைவில் நடைபெறவிருக்கும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சிதான் இன்று நடைபெறவிருந்தது.

Nurul Izzahலெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான நூருல், இன்று மாலை 4.00 மணியளவில் கூச்சிங் வந்தடைந்ததும் தன்மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்ததாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இது மாநில அரசாங்கத்தின் மற்றொரு அதிகார துஷ்பிரயோகம்” என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நூருலுடன் பிகேஆர் கட்சியின் மற்றொரு உதவித் தலைவரான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூச்சிங்கிற்கு உடன் சென்றிருந்தார்.

சரவாக் மாநிலத்தில் அடுத்த ஜூன் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் கடுமையான சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பல தீபகற்ப மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த மாநிலத்தால் தடை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பிரச்சாரத்தால் தேசிய முன்னணியின் வாய்ப்புகள் சரவாக்கில் மேலும் பலவீனப்படும் எனக் கருதப்படுகின்றது.

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் (ஜசெக), பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா (பிகேஆர்), அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் மகளிர் பகுதித் தலைவருமான சுரைடா கமாருடின், சமூக இயக்கங்களின் தலைவர்களான வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, ஹிஷாமுடின் ராய்ஸ், அடாம் அட்லி ஆகியோர் இதுவரை சரவாக் மாநில அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள முக்கியத் தலைவர்களாவர்.