ஜோகூர் பாரு: இன்று வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட, துணைத் தலைவருக்கான போட்டியில் 44 வயதான நூருல் இசா வெற்றி பெற்றார்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, ரபிசி ரம்லி தோல்வியடைந்தார். முழுமையான வாக்கு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் நூருல் மொத்த வாக்குகளில் 9,803 வாக்குகள் பெற்றார் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து தான் வாக்களித்தபடி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து ரபிசி ரம்லி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து புதிய பொருளாதார அமைச்சராக நியமிக்கப்படவிருப்பவர் யார்? அமைச்சரவை மாற்றங்கள் நிகழுமா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன.
இன்று இரவு பிகேஆர் கட்சி மாநாட்டை பிரதமரும் பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடக்கி வைத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து நீண்ட உரையாற்றினார்.
அன்வாரின் மகள் – ஒரு பெண்மணி – என்ற முத்திரைகளோடு பிகேஆர் கட்சியை எதிர்காலத்தில் வழிநடத்தப் போகும் தலைவியாக நூருல் இசா தனது 44-வது வயதில் உருவெடுத்துள்ளது மலேசிய அரசியலில் புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.