கிள்ளான் – பாஸ்-அம்னோவின் உத்தேச கூட்டணி குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வெளியிட்ட கருத்தினை விமர்சனம் செய்யும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமிக்கு சிலாங்கூரில் பாஸ் கூட்டணி அரசிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்தும் தைரியம் உள்ளதா என சிலாங்கூர் கோத்தா ராஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மணியம் (படம்) கேள்வியெழுப்பினார்.
“சிலாங்கூரில் மட்டும் ஜசெக வாய்திறக்காதது ஏன்?”
சிலாங்கூர் மாநில அரசில் பாஸ் கட்சியின் முக்கிய பங்காளி கட்சியாக ஜசெக விளங்குகிறது. அந்த கூட்டணிக்கு எதிராக வாய் திறக்காத ராமசாமி அம்னோ-பாஸ் கூட்டணி தொடர்பில் மஇகா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மட்டும் தன்மூப்பான முறையில் அறிக்கை விடுவது வியப்பாக உள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆர்.எஸ். மணியம் கூறினார்.
“பேராசிரியர் ராமசாமிக்கு உண்மையில் ஜசெகவில் செல்வாக்கு இருந்தால் சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சி கூட்டணியிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்த வேண்டும். ஆனால், அவரால் அவ்வாறு செய்ய முடியாது. காரணம், ஜசெகவைப் பொறுத்தவரை அவர்களின் பிரத்தியேக சீனக் கொள்கையை கொண்ட அக்கட்சிக்கு இந்தியர்களின் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கும் தபால்காரராக மட்டும் இராமசாமி கருதப்படுகிறார்” என ஆர்.எஸ். மணியம் தெரிவித்தார்.
ஜசெகவில் செல்வாக்கும்-சொல்வாக்கும் இல்லாத இராமசாமி
“ஜசெகவின் பலஇனக் கட்சி என்ற மாயத் தோற்றத்தின் அடையாளச் சின்னமாக மட்டுமே ராமசாமி விளங்குகிறார். அதிகாரமற்ற வெறும் அலங்காரப் பதவியாக மட்டுமே அவர் வகித்து வரும் இரண்டாவது துணை முதல்வர் பதவி விளங்குகிறது. லிம் குவான் எங்கை மீறி அவருக்கு ஜசெகவில் செல்வாக்கும் – சொல்வாக்கும் கிடையாது. மஇகா மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்தியர்களின் வாக்குகளை ஜசெகவுக்கு திருப்புதற்காக அவருக்கு வழங்கப்பட்ட கூலிதான் துணை முதல்வர் பதவி” என்றும் மணியம் இராமசாமியைச் சாடினார்.
“இராமசாமி எவ்வளவுதான் விஷத்தைக் கக்கினாலும் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றைக் கொண்ட மஇகா அவற்றையெல்லாம் கடந்து முன்னோக்கி வெற்றி நடை போதும் என்பது திண்ணம். எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க தயாராகி வரும் மஇகாவுக்கு இராமசாமி போன்ற பலவீனமான தலைவர்கள் எல்லாம் ஒரு அச்சுறுத்தலே கிடையாது. அடுத்தப் பொதுத்தேர்தலில் தொகுதி வழங்கப்படாவிட்டால் இராமசாமி ஜசெகவில் நீடிப்பரா என்பது சந்தேகமே. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அரசியலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியத் தொகையில் சுகமான வாழ்க்கையை அனுபவிப்பார். ஆனால், மஇகாவின் போராட்டம் ஒருபோதும் ஓயாது. இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் தனது கடமையை அது தொடர்ந்து ஆற்றி வரும்” என ஆர்.எஸ். மணியம் குறிப்பிட்டார்.