இந்த முறை தன்னையும், ஹன்சிகாவையும் தவிர கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து அரண்மனை 2 -க்கு வண்ணம் கூட்டி பொலிவு சேர்த்திருக்கிறார்.
முக்கியக் கதாப்பாத்திரத்தில் சித்தார்த், திரிஷா, பூனம் பாஜ்வா கூட்டணியைத் தேர்ந்தெடுத்திருப்பது படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளதோடு, ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தி மகிழ்ச்சி படுத்தியுள்ளது.
கதைச்சுருக்கம்
அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டான ராதாரவிக்கு இரண்டு மகன்கள். பெரியவர் சுப்பு பஞ்சு, இளையவர் சித்தார்த். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக அந்த அரண்மனையில் தங்கி வசித்து வருகின்றனர். சித்தாத்திற்கு அவரது மாமன் மகளான திரிஷாவையே நிச்சயமும் செய்கின்றனர்.
அந்த ஊரில் சக்தி வாய்ந்த அம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதற்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக மராமத்து பணிகள் நடைபெறுகின்றது. அதனால் அம்மன் சிலையை சில நாட்கள் தானியப் பெட்டிகள் வைத்து மூடிவிடுகின்றனர். அந்த நேரத்தில், சில தீய சக்திகள் அரண்மனைக்குள் புகுந்து விடுகின்றன.
அதனால், அரண்மனையில் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அதைக் கண்டுபிடிப்பதற்காக வருகின்றார் திரிஷாவின் அண்ணனான சுந்தர் சி. அதன் பிறகு நடப்பது கதையின் திருப்புமுனையும், பல சுவாரஸ்யங்களும்.
நடிப்பு
சித்தார்த் வழக்கம் போல் தனது கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார். அரண்மனை 1-ல் படத்தில் நடிகர் வினயை பெயருக்குப் பயன்படுத்திவிட்டு ஒட்டுமொத்த கதாநாயகன் இடத்தையும் சுந்தர் சி கையாண்டிருப்பார்.
ஆனால் அரண்மனை 2- ல் தனது கதாப்பாத்திரத்தின் பங்கையும் பாதுகாத்துக் கொண்டு, சித்தார்த்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
அதே போல் திரிஷாவிற்கும் படத்தின் இறுதி வரை நடிப்பதற்கு ஆங்காங்கே பல இடங்களைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. என்றாலும் அரண்மனை 1-ல் ஆண்ட்ரியா தனது முக பாவணைகளில் காட்டிய உருட்டல் மிரட்டலை, இந்தப் படத்தில் திரிஷா அந்த அளவிற்கு வெளிபடுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் கவர்ச்சியிலோ ஆண்ட்ரியாவை மிஞ்சிவிட்டார் திரிஷா.
படத்தில் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். அவர் பங்கிற்கு கொஞ்சம் கவர்ச்சியை அள்ளி வீச சுந்தர் சி படம் முழுமையடைகின்றது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை
யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளீச் இரகம். அம்மன் சிலை, அரண்மனை ஆகியவற்றின் பிரம்மாண்டத் தோற்றத்தினை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். பாடல் காட்சிகளிலும் மிக அழகாக வந்துள்ளன.
படத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள வரைகலையும் வண்ணமயமாக மிகச் சிறப்பாக வந்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா பின்னணி இசையும், பாடல்களும் சுமார் இரகம் தான்.
மொத்தத்தில், அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்.
– ஃபீனிக்ஸ்தாசன்