கோலாலம்பூர் – அசுத்தமான, ஆபத்தான, அதிசிரமமான பணிகளை மலேசியர்கள் செய்வதில்லை என்பது தவறான தகவல் என்று அரசு சாரா அமைப்புகளின் ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். ஏறத்தாழ ஆறு லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
“ஏறத்தாழ ஆறு லட்சம் மலேசியர்கள், அசுத்தமான, ஆபத்தான, அதிசிரமமான பணிகளை சிங்கப்பூரில் மேற்கொண்டிருப்பதாக எங்களிடம் உள்ள தகவல் ஆவணங்கள் கூறுகின்றன. நாட்டின் எல்லையைக் கடந்து சென்று அவர்களால் இப்பணிகளைச் செய்ய முடியும் எனில், உள்நாட்டிலும் செய்ய முடியும். ஆனால் சிங்கப்பூரில் ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களை ஊதியமாகப் பெறும்போது, அதே பணிக்கு மலேசியாவில் 900 ரிங்கிட் பெற்றுக் கொண்டு பணியாற்ற அவர்கள் எப்படி விரும்புவர்?” என்று புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வொன்றில் ராஜரத்தினம் கேள்வி எழுப்பினார்.
தோட்டப்பணி, உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைப் பிரிவுகளில் பணியாற்ற 15 லட்சம் வங்காளதேசத்தினர் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட இருப்பதாக துணைப் பிரதமர் சாகிட் ஹமிடி அண்மையில் அறிவித்தார்.
இதையடுத்து, அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவது குறித்த கவலையும் விவாதமும் எழுந்துள்ளது.
இதற்கிடையே மேற்குறிப்பிட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய அரசு சாரா இந்திய இயக்க கூட்டமைப்பின் இணைத் தலைவர் (Coalition of Indian NGOs co-chairman) கே.ஆறுமுகம், கடினமான பணிகளுக்குரிய ஊதிய விகிதத்தை அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.