இந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
19 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய கோபுரத்துடன் கூடிய இந்த மேம்பாட்டுத் திட்டத்தை பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (Permodalan Nasional Berhad) என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
வரும் 2024-ம் ஆண்டிற்கு இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 5 பில்லியன் ரிங்கிட் நிதியில் உருவாகவுள்ள இந்த புதிய கட்டிடம் 630 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கோலாலம்பூரின் அடையாளச் சின்னமாக விளங்கி வரும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் 451.9 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்நிலையில் இந்தப் புதிய கோபுரம் அதை விட 100 மீட்டர் அதிக உயரம் கொண்டிருப்பதோடு, ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோபுரம், உலக அளவில் 5 -வது மிகப் பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுத் தரவுள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நஜிப், இது போன்ற அடையாளச் சின்னமாக விளங்கும் கட்டிடங்கள் தான் தேசம் வரலாற்றில் இடம் பிடிக்க உதவுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதே பிஎன்பி-க்கு (Permodalan Nasional Berhad) சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான ஸ்டேடியம் மெர்டேக்கா மற்றும் ஸ்டேடியம் நெகாரா ஆகியவற்றை மேலும் புகழ்பெறச் செய்யும் ஒரு வரப்பிரசாதமாக வாரிசான் மெர்டேக்கா திகழும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய கோபுரம் கோலாலம்பூரின் சுற்றுலாத்துறையிலும், பொருளாதாரத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நஜிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பிஎன்பி நிர்வாகத் தலைவர் துன் அகமட் சார்ஜி அப்துல் ஹமீட் மற்றும் பிஎன்பி தலைவர் மற்றும் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ ஹமட் காமா பியா சே ஓத்மான் ஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
6 ஆடம்பர தங்கும்விடுதிகளும், 236 அறைகளும், 82 தளங்களில் அலுவலகங்களும் இந்தப் புதிய கட்டிடத்தில் அமைந்திருக்கும் என்றும், வணிக வளாகத்தில் 200 கடைகளும், 12 திரைகளைக் கொண்ட திரையரங்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.