Home Featured கலையுலகம் சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளர் ஆனந்த் ஏற்கனவே திரைப்படங்களில் பாடியவரா? – புதிய சர்ச்சை!

சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளர் ஆனந்த் ஏற்கனவே திரைப்படங்களில் பாடியவரா? – புதிய சர்ச்சை!

1307
0
SHARE
Ad

Vijay TV-Super singer 5 - Anan Arvind-கோலாலம்பூர் – விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் 5 இறுதிச்சுற்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்து, அதில் அதிக வாக்குகள் பெற்ற ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன் மேடையில் இருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆனந்திற்குத் தனது அடுத்த படத்தில் பாடும் வாய்ப்பை அளிப்பதாக உறுதியளித்தார். அதைக் கேட்டு மேடையில் இருந்த ஆனந்த் மட்டுமல்ல உலகமெங்கும் அவருக்கு வாக்களித்து, அவருக்கு வெற்றியைத் தேடித் தந்த அத்தனை ரசிகர்களும் துள்ளிக் குதித்தனர். என்னமோ தாங்களே ஜெயித்துவிட்டதைப் போல் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

இப்படியிருக்க, உண்மையில் இந்த ஆனந்த் யார் என்ற விவரம் நேற்று முதல் பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகின்றது.

#TamilSchoolmychoice

மூச்சுக்கு முன்னூறு தடவை ‘பிரம்மாண்ட குரலுக்கான தேடல்’ என்று தானே விளம்பரம் செய்தனர். தேடல் என்றால் இந்தப் போட்டியில் இடம்பெற்றிருக்க வேண்டியவர்கள் யார்? முற்றிலும் இந்தத் துறைக்குப் புதியவர்கள் தானே?

ஆனால், ஆனந்த் அரவுந்தாக்‌ஷன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் திரைப்படங்களுக்குப் பின்னணி பாடி வரும் ஒரு பாடகர் என்ற அதிர்ச்சி செய்தி தான் தற்போது நட்பு ஊடகங்களை கலக்கி வருகின்றது.

விஜயசக்ரவர்த்தி எஸ்பி (Vijayachakravarthy SP) என்ற நபர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தி இதோ:-

“விஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.”

“அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
பாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன்.”

“பெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன். அந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன அதிகம் பிரபலமடையாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள்.

1. இந்த வான்வெளி விடியாதோ – படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ –
படம்: நீர்ப்பறவை(2012) இரண்டு பாடல்களும் Male Solo, பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன்!

“இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்ததில் 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார் இவர். இந்த தகவலை எதாவதொரு எபிசோடில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஓரளவு தொடர்ச்சியாக பார்த்தவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.”

“பார்வையாளர்களை எவ்வளவு கேனையர்களாக நினைத்திருந்தால் ஒரு பிண்ணனி பாடகரை போட்டியாளராக கொண்டு வந்து, அவரை பாதியில் எலிமினேட் செய்து, மீண்டும் wild card என்ற பெயரில் உள்ளே கூட்டி வந்து, மக்களை முட்டாளாக்கி எஸ்.எம்.எஸ் ஓட்டு போட வைத்து அவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.”

“இது ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று பல முறை பலர் சொன்ன போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் இது போன்ற போலி நிகழ்ச்சிகளை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உருப்படியாக எதாவது செய்யலாம்.”

இப்படி ஒரு செய்தி நேற்று முதல் பேஸ்புக்கில் பரவி வருகின்றது.

தேடிப் பார்த்ததில் அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் ‘கானா கானா’ பாடலை ஷ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருப்பவரின் பெயர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் என்று தான் உள்ளது.

விரைவில், விஜய்டிவியோ அல்லது ஆனந்த் தரப்பில் இருந்தோ இது குறித்து விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொகுப்பு: செல்லியல்