Home Featured தமிழ் நாடு பணம் கொடுத்து தேமுதிக நிர்வாகிகளை இழுக்கும் கீழ்த்தரமான கட்சி திமுக – வைகோ குற்றச்சாட்டு!

பணம் கொடுத்து தேமுதிக நிர்வாகிகளை இழுக்கும் கீழ்த்தரமான கட்சி திமுக – வைகோ குற்றச்சாட்டு!

757
0
SHARE
Ad

vaikoசென்னை – தேமுதிகவில் உள்ள நிர்வாகிகளுக்கு ரூ. 3 கோடிவரை பணம் கொடுத்து தங்களின் பக்கம் இழுக்கும் கீழ்த்தரமான வேலையை திமுக செய்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சந்திரகுமார் விலை போய்விட்டாரா என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இதற்கு அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். 3 எம்.எல்.ஏக்கள், சில மாவட்ட செயலாளர்களுடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரகுமார், யாருக்கும் தெரியாமல் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துவிட்டார் விஜயகாந்த் என குற்றம்சாட்டினார்.

விஜயகாந்திற்காக உண்மை விசுவாசியாக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தோம் என்ற அவர், திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என 95 சதவீதம் தேமுதிகவினர் கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு ஆதரவான முடிவை விஜயகாந்த் எடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், தற்போதைய கூட்டணியில் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதிமுக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி தேமுதிக தான் என்று குறிப்பிட்ட சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியுடன் சேருவது குறித்து எந்த நிர்வாகியுடனும் கலந்தாலோசிக்கவில்லை என்றார். திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் அவர் கூறினார்.

கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் தமது முடிவை மாற்றிக் கொள்ள இன்று வரை கெடுவும் விதித்தார் சந்திரகுமார். இந்த நிலையில் போர்க்கொடி உயர்த்திய அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த்.

தேமுதிகவில் எழுந்துள்ள உட்கட்சி கலகம் தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான் கேள்விப்படுகிறேன் ஒவ்வொரு நபருக்கும் ரூ.3 கோடி கொடுத்து இழுக்கின்றனர். கூட்டணிக்கு யாரையும் அழைக்கவில்லை என்று ஸ்டாலின் சொன்னார்”.

“இப்போது கூட்டணிக்கு போகாத தேமுதிகவை சிதைக்க நினைக்கிறது திமுக அது ஒருபோதும் நடக்காது. விஜயகாந்த் பின்னால் தேமுதிக தொண்டர்கள் இருக்கிறார்கள். திமுக படு கீழ்த்தரமான செயலை செய்கிறது”.

“விஜயகாந்திற்காக உயிரைக்கொடுப்பேன் என்று கூறிய சந்திரகுமார் இன்றைக்கு கெடு விதிக்கிறார். சந்திரகுமார் விலை போய்விட்டாரா?. திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக மாபெரும் வெற்றியடையும்” என்றும் வைகோ கூறினார்.