சென்னை – சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய பரப்புரையிலிருந்து, நேற்று விருத்தாசலத்தில் தொடர்ந்தது வரை கருணாநிதியைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் பதிலடியாக நேற்று கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே! நீங்கள் சர்வ காலமும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் வானத்திலிருந்து தயவுசெய்து சற்றுக் கீழே இறங்கி வாருங்கள்! நேரிடையாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நிதானமாகப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்! ஜெயலலிதா, சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வதில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டு விட்டு, உண்மை ஏதாவது கைவசம் இருந்தால், அதைப்பற்றிப் பேசட்டும்! இல்லாவிட்டால் “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே” என்றுதான் பாடத் தோன்றும்” என கலைஞர் கருணாநிதி காட்டமாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.