Home Featured தமிழ் நாடு தனியார் மது விற்பனையைக் கொண்டுவர கருணாநிதி சூழ்ச்சி – ஜெயலலிதா குற்றச்சாட்டு!

தனியார் மது விற்பனையைக் கொண்டுவர கருணாநிதி சூழ்ச்சி – ஜெயலலிதா குற்றச்சாட்டு!

590
0
SHARE
Ad

jayalalitha-1வாரணவாசி – திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்து அறிவிக்காமல், டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று கூறியதன் மூலம் மீண்டும் தனியார் மது விற்பனையைக் கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார் கருணாநிதி என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“பலரும் மதுவிலக்கு குறித்துப் பேசுகின்றனர். ஆனால் கருணாநிதிக்கோ, திமுகவுக்கோ மதுவிலக்கு குறித்துப் பேச அருகதையில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்று ஏன் அறிவிக்கவில்லை? பூரண என்ற வார்த்தையை தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிடவில்லை”.

#TamilSchoolmychoice

“மதுவிலக்குக்காக சட்டம் கொண்டு வருவோம். டாஸ்மாக் கடையை மூடுவோம் என்றுதான் கூறியுள்ளனர். கருணாநிதி மீண்டும் தனியார் மூலம் மது விற்பனையைக் கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்”.

“ஒரு தலைமுறைக்கு மதுவை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சேரும். சட்டப்பேரவையில் மது ஒழிப்பு தொடர்பாக பேசும்போதும் கூட, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதைவிட கால ஓட்டத்துக்கு தகுந்தாற்போல அதிகம் பாதிப்பில்லாத மதுவை வழங்க வேண்டும் என்றே கருணாநிதி கூறியுள்ளார்”.

“திமுக தலைவர் கருணாநிதி தற்போது குழப்பத்தில் உள்ளார். அவரும், அவரது கட்சியினரும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு வேண்டியதை நீங்கள் கேட்காமலேயே எனது அரசு செய்யும். எனவே நீங்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்” என்றார்.