Home Featured உலகம் அபு சயாப் தொடர்ந்து அட்டூழியம்: கனடா பிணைக் கைதியின் தலையை வெட்டினர்!

அபு சயாப் தொடர்ந்து அட்டூழியம்: கனடா பிணைக் கைதியின் தலையை வெட்டினர்!

825
0
SHARE
Ad

canadaஒட்டாவா – பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பான அபு சயாப், தாங்கள் கடத்தி வைத்திருந்த கனடா நாட்டவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

பிலிப்பைன்சிலுள்ள தீவு ஒன்றில் வெளிநாட்டினர் ஒருவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை பிலிப்பைன்ஸ் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

“கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி முதல் பிலிப்பைன்சில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கனடா குடிமகன் ஜான் ரிட்செல், கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதை அறிந்து நான் கொதித்துப் போயுள்ளேன்”

#TamilSchoolmychoice

“இது ஒரு கொடூரமான கொலை, இந்தச் சம்பவத்திற்கு அவரைக் கடத்தி வைத்திருந்த தீவிரவாத அமைப்பே பொறுப்பு” என்று ஜஸ்டின் நேற்று அறிவித்துள்ளார்.

ரிட்ஸ்டெலும், அவரது சக கனடா நாட்டு சுற்றுலாப் பயணி ராபர் ஹால், அவரது பெண் தோழி பிலிப்பினா மாரிடெஸ் பிளார் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்தவரான ரிசார்ட் மேலாளர் ஜார்டான் செக்கிங்ஸ்டட் ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு முன் ஜோலோவிலிருந்து 500 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் அமைந்துள்ள டாவோ என்ற நகரத்திற்கு அருகே பிலிப்பைன்சின் அபு சயாப் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்டு 6 வாரங்களுக்குப் பிறகு அபு சயாப் அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய போராளி ஒருவன் வெளியிட்ட காணொளி ஒன்றில், கடத்தப்பட்ட அவர்கள் அடர்ந்த காட்டில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் மூவரையும் விடுவிக்க 21 மில்லியன் அமெரிக்க டாலர் (82 மில்லியன் ரிங்கிட்) பிணைத்தொகையாகக் கேட்டனர்.

அதே காணொளியில், தங்கள் உயிரைக் காப்பாற்றும் படி பிணைக் கைதிகள் கெஞ்ச வைக்கப்பட்டனர்.

அண்மையில் வெளியான புதிய காணொளி ஒன்றில், 60 வயதான ரிட்ஸ்டெல், தன்னை விடுவிக்க 6.4 மில்லியன் அமெரிக்க டாலர் (25 மில்லியன் ரிங்கிட்) அளிக்கும் படியும், அதைக் கொடுக்கவில்லை என்றால் ஏப்ரல் 25-ம் தேதி, தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்றும் கெஞ்சினார்.

இந்நிலையில், நேற்று மோட்டாரில் வந்த இருவர் ஜோலோ சிட்டி ஹால் அருகே, பிளாஸ்டிக் பையில் தலை ஒன்றைச் சுற்றி வீசியெறிந்து சென்றுள்ளனர்.

தற்போதைய தகவலின் படி அது ஒரு வெள்ளைக்காரரின் தலை என்கின்றனர் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள். எனினும் விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.