Home Featured இந்தியா மற்ற மாநிலத் தேர்தல்கள்: மேற்கு வங்கத்தில் மம்தா – அசாமில் பாஜக – கேரளாவில் கம்யூனிஸ்ட்...

மற்ற மாநிலத் தேர்தல்கள்: மேற்கு வங்கத்தில் மம்தா – அசாமில் பாஜக – கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி!

673
0
SHARE
Ad

புதுடில்லி – தமிழகத் தேர்தல் பரபரப்பான முறையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நேற்று ஒரே நேரத்தில் நடந்த மற்ற மாநிலத் தேர்தல்களின் மீதும் அரசியல் பார்வையாளர்களின் பார்வைகள் தற்போது பதிந்துள்ளன. இந்த மாநிலத் தேர்தல்களின் முடிவும் எதிர்வரும் 19ஆம் தேதி, தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் அன்றே வெளியிடப்படும்.

mamthaமம்தா பானர்ஜி…

கருத்துக் கணிப்புகளைப் பொதுவாக வைத்துப் பார்க்கும்போது அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

கேரளத்தில் தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும், அதற்கு மாற்றாக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி வெற்றி வாகை சூடும் என கணிக்கப்படுகின்றது.

மேற்கு வங்கத்தில் இன்னொரு அம்மாவாகப் பார்க்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் வென்று ஆட்சி அமைப்பார் என்றும் ஆனால், பாஜக கணிசமான அளவில் தொகுதிகளைப் பெற்று மேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அசாம் – பாஜக

இந்தியாவின் வடமேற்கு மூலையில் மிகவும் பின்தங்கிய மாநிலம் அசாம். இந்தப் பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருபவை,  அடர்ந்த மரக் காடுகள், யானைகள், தேயிலைத் தோட்டங்கள் – ஆகியவைதான்!

தற்போது காங்கிரஸ் இங்கு ஆட்சி செய்து வருகின்றது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் பாஜகவுக்கு 79 முதல் 93 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரசுக்கு 26 முதல் 33 இடங்கள் கிடைக்கும் என்றும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 6 முதல் 10 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே தலைமையில் நடந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

மற்ற கருத்துக் கணிப்புகளும் இதே போன்ற முடிவைத் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மம்தா

தமிழ்நாட்டுக்கு அம்மா ஜெயலலிதா என்றால், மேற்கு வங்கத்தின் அம்மா மம்தா. பல ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை அந்த மாநிலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்த சாதனையைப் படைத்தவர், இந்த முறை இரண்டாவது தவணக்கு முதல்வராக முன்னிறுத்தப்பட்டார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் தனிப் பெரும்பான்மை திரிணாமுல் காங்கிரசுக்குக் கிடைக்கும் என்பது முடிவான ஒன்று என்றாலும்  கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் இணைந்த கூட்டணி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும், பாஜக எத்தனை தொகுதிகள் கைப்பற்றும் என்பதுதான் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் கேள்வி. இதன் மூலம், மம்தாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் அரசியல் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி

umman chandi-kerala cmநடப்பு கேராள முதல்வர் உம்மன் சாண்டி….

கேரளாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் கேரளத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 91 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கக்கூடும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு 43 இடங்கள் கிடைக்கக் கூடும் எனக் கணிக்கப்படும் வேளையில், பாஜக எத்தனை இடங்கள் பெறும் என்பதுதான் கேரளா மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் கேள்வி.

sreesanth-cricket-BJP Candidateமுன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்….

காரணம், முதன் முறையாக கேரளாவில் பெரிய அளவில் போட்டியிடும் பாஜக கணிசமான வாக்கு வங்கியைப் பெறுமா, சில தொகுதிகளை வெல்லுமான என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள முன்னணி நடிகர் சுரேஷ் கோபியை தன்பக்கம் சேர்த்துக் கொண்டுள்ள  பாஜக இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை திருவனந்தபுரத்தில் களமிறக்கியுள்ளது. கேரளாவில் தற்போது பாஜகவின் முகங்களாகப் பார்க்கப்படுபவர்கள் சுரேஷ் கோபியும், ஸ்ரீ சாந்தும்தான்!

-இரா.முத்தரசன்