Home Featured நாடு ஹூடுட் மசோதாவிற்கு எதிராக பாரிசான் கூட்டணிக் கட்சிகள் போர்கொடி!

ஹூடுட் மசோதாவிற்கு எதிராக பாரிசான் கூட்டணிக் கட்சிகள் போர்கொடி!

828
0
SHARE
Ad

BN partiesகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் ஹூடுட்  மசோதாவிற்கு முன்னுரிமை வழங்வது குறித்து பாரிசான், தனது கூட்டணிக் கட்சிகளிடத்தில் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், பாரிசான் கூட்டணிக் கட்சிகளான மசீச, கெராக்கான், மஇகா, எஸ்யுபிபி ஆகியவை நேற்று கூட்டாக இணைந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் என்ற தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவை அரசாங்க விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

“பாரிசான் உச்சமன்றக் கூட்டத்திலோ அல்லது அமைச்சரவையிலோ இந்த விவகாரம் கலந்தாலோசிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம்” என்று நேற்று அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மலேசியர்கள் மத்தியில் சில தரப்பினருக்கு மட்டும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு வரும் இது போன்ற முயற்சிகளுக்குத் தாங்கள் ஆதரவு தரப்போவதில்லை என்றும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

கூட்டரசு அரசியலமைப்பு கட்டுரை 8 (1)-ன் படி, சட்டத்தின் முன் அனைத்து மலேசியர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மலேசியா போன்ற பல்லினங்கள் மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாட்டில், செயலாக்கம் மற்றும் தண்டனைகளில் இந்த சமநிலை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

“அதனால் இந்த மசோதா அது போன்ற பாதுகாப்புகளை அகற்ற முயற்சி செய்கிறது. தற்போது இருக்கும் நிலையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டால், அது கூட்டரசு அரசிலமைப்புக்கு எதிரானதாக இருக்கும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஹுடுட் மசோதாவிற்கு எதிரான செய்தியாளர்கள் சந்திப்பில் பாரிசான் கூட்டணிக் கட்சிகளான மசீச சார்பில் அதன் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், மஇகா சார்பில் அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், கெராக்கான் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூ கியாங் மற்றும் எஸ்யுயுபிபி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரிச்சர்டு ரியாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செய்தியாளர்கள் சந்திப்பில் டி.மோகன் கூறுகையில், “இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு டாக்டர் எஸ்.சுப்ரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மசோதா சட்டத்தின் முன் இஸ்லாமியர்களும், இஸ்லாம் அல்லாதவர்களும் சமமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு குற்றவியல் நீதி அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அதோடு, இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் கூட்டரசு அரசியலமைப்பிற்கு முரணாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.