Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தில்லுக்கு துட்டு – காமெடிப் படத்தில் கொஞ்சம் பேயும் உண்டு!

திரைவிமர்சனம்: தில்லுக்கு துட்டு – காமெடிப் படத்தில் கொஞ்சம் பேயும் உண்டு!

951
0
SHARE
Ad

dhilluku-dhudduகோலாலம்பூர் – தமிழ் சினிமாவைப் பிடித்துக் கொண்ட பேய் கான்செப்ட் அதை விட்டுப் போவேனா? என்று அடம் பிடிக்கிறது. காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானம் கூட, சீஸன் முடிவதற்குள் ஒரு பேய் படமாவது செய்துவிடுவோம் என்று எண்ணும் அளவிற்கு, வர்த்தக ரீதியில் பேய் படங்களுக்கு இன்னும் வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி லொல்லு சபா புகழ் ராம்பாலா, சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் படம் தான் ‘தில்லுக்கு துட்டு’.

சமீபத்தில் வந்த பேய் படங்களில், பயத்தோடு, காமெடியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும், ஆனால் இந்தப் படத்தில், பயத்தை ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டு, முழுக்க முழுக்க பேயை வைத்தே காமெடி செய்ய வைத்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

கதைச்சுருக்கம்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சந்தானம், சிறுவயதில் தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பணக்கார சேட்டு பொண்ணு சனன்யாவைக் காதலிக்கிறார். இவர்களின் காதலுக்கு சனன்யாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

11-2ஆனால் சனன்யா தனது காதலில் தீவிரமாக இருப்பதை அறிந்து, மொட்டை ராஜேந்திரனோடு சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகிறார்.

அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதாகக் கூறி, மலைப்பிரதேசமான சிவன் கொண்டை மலை என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு பங்களாவில் வைத்து, சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தைக் கொலை செய்வது தான் அந்தத் திட்டம்.

ஆனால், அந்த பங்களாவிற்குப் போன பின், அங்கு நடக்கும் மர்மங்கள் தான் படத்தின் மீதி சுவாரசியம்.

ரசிக்கும் இடங்கள் 

இதுவரைப் பார்த்திராத ஸ்டைலிசான சந்தானத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். சந்தானத்தின் அறிமுகப் பாடலே அட்டகாசமாக இருக்கின்றது. சண்டைக் காட்சிகளிலும் மனிதர் வெளுத்து வாங்குகிறார்.குறிப்பாக, கார் நிறுத்துமிடம் ஒன்றில் வரும் சண்டைக் காட்சி, மிகவும் ரசிக்க வைக்கின்றது.

Santhanam, Shanaya in Dhilluku Dhuddu Movie Stills

கதாநாயகி சனன்யா.. நடிப்பில் பெரிதாக ஈர்க்கவில்லை. என்றாலும், கதைக்குப் பொருத்தமாக இருக்கிறார். தேவையான இடத்தில் கொஞ்சம் கிளாமர் காட்டி, தனது பங்களிப்பை நிறைவு செய்கின்றார்.

இவர்களோடு நடிகர் ஆனந்த்ராஜ், கருணாஸ், டி.எம்.கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், இந்தி நடிகர் சௌரப் சுக்லா என ஒரு பெரிய பட்டாளமே காமெடி செய்திருக்கின்றது.

அதிலும், குறிப்பாக மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் பேய் கான்செப்ட்டும், நிஜப் பேயைக் கண்டு மிரளும் காட்சிகளும் திரையரங்கை அதிரச் செய்யும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

படத்தில் இன்னொரு சிறப்பு, சந்தானம் பேசும் வசனம். “செவுல்ல ஒன்னு விட்டா, செல்ஃபி எடுக்க மூஞ்சி இருக்காது”, “ஏண்டா.. டைனோசர்.. முட்டையப் பார்க்குற மாதிரி பாக்குற?” இப்படியாக சந்தானத்தின் திடீர் வசனங்கள் அவ்வப்போது ரசிகர்களை உற்சாகமூட்டுகின்றன.

தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளீச் இரகம்.. மலைப்பிரதேசக் காட்சிகள் பெரும்பாலும் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பதால், அதன் பிரம்மாண்டமான அழகைக் காட்ட காட்சிகள் இல்லை.

தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும் விதம்.

சுமார் இடங்கள்

Dhilluku-Dhuddu-Movie-Latest-Images-06கதை.. படத்தில் சந்தானமே ஒரு காட்சியில் பேயைக் கலாய்ப்பது போல் அதர பழசான பேய் பங்களா கதை..

கதை நகர்த்திச் சென்ற விதம் அதை விட சுமாரான பாணி என்பதால், படத்தில் இடம்பெறும் திடீர் திருப்பங்கள் அன்றாடம் காலையில் வாட்சாப்பில் வரும் ‘குட்மார்னிங்’ மெசேஜ் போல் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லாமல் இருக்கின்றது.

பொய்யாக செட் செய்யப்படும் பேய்க்கும், நிஜமாக வரும் பேய்க்கும் வித்தியாசமே இல்லாமல் காட்டப்பட்டிருப்பதால், கதைப்படி உண்மையான பேய் வரும் போது கூட அதைப் பேயாகவே பார்க்க முடியவில்லை.

இதையெல்லாம் தவிர்த்து ஒரு நல்ல விறுவிறுப்பான புதிய கதையில், சந்தானத்தின் இதே ஸ்டைலிஸ் நடிப்பையும், காமெடியையும் பயன்படுத்தியிருந்தால், தயாரிப்பாளரின் ‘தில்லுக்கு’ துட்டு கிடைத்திருக்கும்.

Dhillukku Dhuttuஎன்றாலும், அதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது. இப்போது விடுமுறை தினம் என்பதாலும், வேறு பெரிய படங்களின் வரவு இல்லாததாலும், இன்னும் சில தினங்களுக்கு ‘தில்லுக்கு துட்டு’ கணிசமான துட்டை அள்ளும் வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில், விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு சென்று, படம் பார்த்து சிரித்துவிட்டு வர ‘தில்லுக்கு துட்டு’ ஏற்ற படம் தான்.

-ஃபீனிக்ஸ்தாசன்