Home Featured நாடு பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!

பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!

1099
0
SHARE
Ad

subramaniam-dr

கோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில சட்டமன்றம் மாநில இஸ்லாமிய சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டிருப்பதற்கு மஇகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இந்த விவகாரம் இந்திரா காந்தி வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தகராற்றுக்குரிய அம்சமாக இருந்து வந்திருக்கின்றது. நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு பெரும் மிரட்டலாக விளங்கி வந்துள்ள இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அமைச்சரவை முயற்சி செய்து வரும் வேளையில், தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கொண்ட பெர்லிஸ் அரசாங்கம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது நமது நாட்டின் மத அமைதிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகும்” என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த பெர்லிஸ் மாநில சட்டமன்றத்தின் சட்டத் திருத்தத்தால் மலேசிய மக்களிடையே பெரும் ஒற்றுமைக் குலைவு ஏற்படப் போகின்றது” என்றும் எச்சரித்த டாக்டர் சுப்ரா “முன்பு 18 வயதுக்கும் குறைவான ஒரு குழந்தையின் மதத்தை மாற்றுவதற்கு தாய் மற்றும் தந்தை என இருவரின் அனுமதியும் தேவை என்ற சம உரிமை நிலைப்பாடு இருந்தது. ஆனால் இப்போது இருவருக்குமான அந்த உரிமை பெர்லிஸ் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தாயிடமிருந்து பால் குடிக்கும் நிலையிலுள்ள குழந்தைகள் கூட இனி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, மத இலாகாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டு, அதன் பின்னர் தாயின் அன்பையும், அரவணைப்பையும் நிரந்தரமாக இழக்கும் அபாயகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்” என்றும் சுப்ரா கூறினார்.

இதுபோன்ற சட்டத் திருத்தங்களை, ஒரு குழந்தையின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான உரிமை பறிப்பாக மஇகா கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ள சுப்ரா, ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தாயின் அன்பைப் பெறுவதற்கான உரிமை இருக்கின்றது என்னும் நிலையில் ஏன் பெர்லிஸ் அரசாங்கம் பெற்றோர்கள் இருவரும் இணைந்து குழந்தைக்குத் தரவேண்டிய அன்பை நிராகரிக்கின்றது – அதன் மூலம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றது? எனவும் கடுமையான கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.