பெங்களூரு – பிரவாசி பாரதிய திவாஸ் 2017 மாநாடு நடைபெறும் பெங்களூரு மாநிலம் உலகெங்கிலுமிருந்து வருகை தந்துள்ள பேராளர்களின் வருகையால் களை கட்டத் தொடங்கியுள்ளது.
பெங்களூரு அனைத்துலக கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு இன்று சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது.
மலேசியாவிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மலேசியாவின் இந்தியத் தலைவர்களும் அரசாங்க அமைச்சரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் இந்தியத் தலைவர்களும்கூட இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
ஏற்கனவே, தொலைத் தொடர்பு மற்றும் கணினித் துறையில் உலக வரைபடத்தில் இடம் பெற்றிருக்கும் பெங்களூரு, இப்போது உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டு இந்தியர்களின் வருகையால் மேலும் வண்ணமயமாகியுள்ளது.
நகரெங்கும் அலங்கார வளைவுகளும், பிரம்மாண்டமான பதாகைகளும் அலங்கரிக்கின்றன.
மாநாட்டுக்கான அதிகாரபூர்வ அழைப்பு பதாகை
இன்று சனிக்கிழமை தொடங்கும் இந்த மாநாட்டின் முதல் நாள் இளைஞர் மாநாடாக மலர்கின்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று திட்டமிடப்பட்டுள்ளன.
மாநாட்டை முன்னிட்டு பல்வேறு பொருளாதாரக் கருத்தரங்குகளும் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக கண்காட்சி மையத்தை அமைத்துள்ளதோடு, பல மாநில முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.