Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவுக்கு சசி எழுதிய மன்னிப்புக் கடிதம் – ஓபிஎஸ் வெளியிட்டார்!

ஜெயலலிதாவுக்கு சசி எழுதிய மன்னிப்புக் கடிதம் – ஓபிஎஸ் வெளியிட்டார்!

506
0
SHARE
Ad

jayalalithaa759சென்னை – ஜெயலலிதாவுக்கு எதிராகத் தனது உறவினர்கள் செய்த சதி குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று சசிகலா எழுதிய கடிதம் ஒன்றை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் சசிகலா கூறியிருப்பதாவது:–

“என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித்திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.”

#TamilSchoolmychoice

“இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை.சந்தித்த நாள் முதல் இன்றுவரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.”

“என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன்.”

“அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. என்னைப் பொறுத்த வரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்கவேண்டும் என்றோ, சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.”

“பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை.அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன்.என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்’’ – இவ்வாறு அக்கடிதத்தில் சசிகலா கூறியிருக்கிறார்.