Home Featured நாடு 1எம்டிபி முறைகேட்டில் வாங்கப்பட்ட நகை திரும்ப அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

1எம்டிபி முறைகேட்டில் வாங்கப்பட்ட நகை திரும்ப அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

799
0
SHARE
Ad

வாஷிங்டன் – 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை இலாகா தொடுத்திருக்கும் வழக்கைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகையும், விளம்பர அழகியுமான மிரண்டா கெர் (Miranda Kerr) என்பவர் (படம்) ஏறத்தாழ 35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைத் திரும்பவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.

1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டதாகப் புகார் கூறப்படும் ஜோ லோ என்ற வணிகர் அமெரிக்க டாலரில் 8.1 மில்லியன் மதிப்பு கொண்ட (ரிங்கிட் மதிப்பில் 35 மில்லியன்) அந்த நகைகளை மிரண்டா கெர் நடிகைக்கு அன்பளிப்பாக வழங்கினார் என அமெரிக்க நீதித்துறை தனது குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை மிரண்டா கெர் திரும்பவும் அமெரிக்க நீதித் துறையிடமே ஒப்படைத்து விட்டார்.

இந்தத் தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடங்கியது முதல் மிரண்டா கெர் விசாரணைகளில் முழு ஒத்துழைப்பு வழங்கி வந்திருக்கின்றார் என்றும் தன்னிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை அவர் மீண்டும் ஒப்படைத்திருப்பதாகவும், தொடர்ந்து தேவைப்படுமானால் விசாரணைகளில் பங்கெடுத்து ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அவரது பேச்சாளர் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் தெரிவித்திருக்கின்றது.

“மலேசிய அதிகாரி 1” என்பவரின் மனைவியும் இதுபோன்று 1 எம்டிபி ஊழல் பணத்தில் நகைகளைப் பெற்றார் என்றும் அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியிருந்தது.

இதே போன்று ஏற்கனவே பிரபல நடிகர் லியோர்னாடோ டி காப்பிரோவும் தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை திரும்பவும் ஒப்படைக்க முன்வருவதாக அறிவித்தார்.

இதுவரையில் 1எம்டிபி மூலம் 4.5 பில்லியன் ரிங்கிட் அமெரிக்க டாலர் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்தப் பணத்தின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் அமெரிக்க டாலரில் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் தனது குற்றப் பத்திரிக்கைகளில் அமெரிக்க நீதித் துறை குறிப்பிட்டிருக்கின்றது.