மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனும், அமைச்சர் ஜெயகுமாரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
“நான் எத்தனையோ அனைத்துலக மாநாடுகளில் உரையாற்றச் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எதுவும் கூறாத என் தாயார், இன்று நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றப் போகிறேன் என்று கூறியதும் ‘ஒழுங்காகப் பேசி விட்டு வா’ என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
“தமிழர்கள் உலகம் எங்கும் சென்று சேர்ந்த இடங்களில் எல்லாம் தமிழ் உணர்வும், தமிழ் சிந்தனையும் நிலைத்து நிற்கின்றது. மலேசியாவில் அரசாங்கத்தில் தமிழர்கள் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதோடு, அரசாங்க ஆதரவோடு, தமிழ் மொழியை அரசாங்கப் பள்ளிகளிலேயே முழுக்க முழுக்க பயிலும் பெருமை மலேசியாவுக்கு இருக்கிறது. அதே வேளையில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி என்ற தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு தமிழ் மொழியை பல்கலைக் கழக அளவில் பயிலும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உலகம் எங்கும் தமிழர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் நம் தமிழ்மொழி வாழ்கிறது. தமிழர்களிடையே எத்தகைய பிரிவுகள் இருப்பினும் தமிழ்மொழி அனைவரையும் ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கிறது” என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.
உலகம் எங்கும் தமிழர்கள் இருந்தாலும், மலேசியாவில்தான் தமிழுக்கென பிரத்தியேகமாக தமிழ் வாழ்த்து பாடப்படுகிறது என்பதையும், மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்தப் பாடலைத்தான் நாங்கள் பாடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டிய டாக்டர் சுப்ரா, அந்தப் பாடலை எழுதிய அமரர் சீனி நைனா முகம்மது அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார்.
“சுமார் 200 ஆண்டுகளாக தமிழ்மொழி பள்ளிக் கல்வி நிலையில் நம் மலேசியாவில் வாழ்கிறது. மலேசிய இந்தியர்கள் தங்களின் கலை கலாச்சாரத்தை கடைப்பிடித்து வரும் அதே வேளையில், மலேசிய அரசியல் அமைப்பிலும் தமிழ்மொழி மலேசியாவில் நிலைத்து வாழ்கிறது. மலேசியாவில் 530 தமிழ்ப்பள்ளிகள் சீரும் சிறப்புமாக இயங்கி வருகின்றன. சுமார் 10,000 ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் வேளையில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். புதிய தமிழ்ப் பள்ளிகளை தொடர்ந்து நிர்மாணித்து வருவதோடு, இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களையும் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து பயிற்சியளித்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனதுரையில் தெரிவித்தார்.