கடந்த இரண்டு தவணைகளாக அவர் வகித்து வரும் செனட்டர் பதவி எதிர்வரும் 1 நவம்பர் 2017-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக மற்றொரு இந்தியர் கட்சியின் தலைவர் அல்லது பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் நிலவி வந்தன.
எனவே, நவம்பரில் நல்லாவின் செனட்டர் பதவிக் காலம் முடிவடையும்போது, மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு (படம்) அந்த செனட்டர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
அண்மையக் காலமாக இந்தியர் வாக்குகளைக் கவருவதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம், நல்லாவுக்குப் பதிலாக மற்றொரு இந்தியத் தலைவரை செனட்டராக முன்னிறுத்துவதன் மூலம், இந்திய சமுதாயத்தின் சில அரசியல் பிரிவினரின் வாக்குகளைக் கவரத் திட்டமிடலாம்.
ஹிண்ட்ராப் அமைப்பு துன் மகாதீரின் தலைமையில் இயங்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைய முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், ஹிண்ட்ராப்பிலிருந்து பிரிந்து வந்த அமைப்பான மக்கள் சக்தி கட்சிக்கு – அதன் தலைவரும் முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவருமான – தனேந்திரனுக்கு நல்லாவின் செனட்டர் பதவியை வழங்குவதன் மூலம், ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் சிலரை வளைக்க முடியும் என தேசிய முன்னணி கருதலாம்.
-இரா.முத்தரசன்