மற்ற பேய் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தப் படத்தில் பேய் கலர் கலராக பலூன்களைப் பறக்கவிடுகின்றது.’ஐடி’, ‘கிளவுன்’ போன்ற ஆங்கிலப் படங்களின் பாணியில் பேய் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு வருகிறது. அந்த ஒப்பனை மட்டுமே தமிழுக்குப் புதுமை. மற்றபடி, பேய்க்கான பிளாஷ்பேக் அதரபழசான ‘ஜகன் மோகினி’ காலத்து கதை.
அந்த வீட்டில் திடீர் திடீரென பலூன்கள் பறந்து வருகின்றன. பல ‘வழக்கமான’ அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அது என்னவென்று கண்டுபிடிக்க ஜெய், அங்குள்ள பாதிரியார் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றது.
அது என்ன? அதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் பிற்பாதி.
“இப்ப பாருங்களே மெத்தைக்குள்ள இருந்து பேய் வரும்” என்று முன்சீட்டில் இருந்து ஒருவர் கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இப்படியாக திரைக்கதை அமைப்பு கொஞ்சம் இழுவை தான்.
என்னங்க? படத்துல ரசிக்க ஒன்னுமில்லையா? என்று கேட்பவர்களுக்கு, யோகி பாபுவின் காமெடி, முதல் பாதி முழுக்க சிரிக்க வைக்கிறது. ஒருபக்கம் பேய் டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்க பேயையே கலாய்த்து யோகி பாபு தான் படம் பார்ப்பவர்களின் இறுக்கத்தைப் போக்குகிறார்.
பாதிரியார் ஜெபமாலையை வைத்துக் கொண்டு பேயிடம் நீட்ட, “என்ன இவரு டிவி இல்லாமலேயே ரிமோட்ட மாத்திக்கிட்டு இருக்காரு” என்று யோகிபாபு அடிக்கும் திடீர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.
என்றாலும், சிறுவனை யோகிபாபு நடத்தும் விதமும், நசுக்கிடுவேன், பொதச்சிடுவேன் என்று திட்டும் விதமும் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது.
ஜெய், அஞ்சலி ஜோடி கதாப்பாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக ஜெய்யின் அண்ணன் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துறுதுறுவென்று நடித்திருக்கிறார்.
ஆர்.சரவணனின் ஒளிப்பதிவு ஊட்டியின் குளிர்ச்சியை கண்ணுக்குக் கொடுக்கிறது. யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தோடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
மற்றபடி, ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!
-ஃபீனிக்ஸ்தாசன்