Home நாடு தலைமை வழக்கறிஞர் பதவிக் காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தலைமை வழக்கறிஞர் பதவிக் காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

849
0
SHARE
Ad
டான்ஸ்ரீ அபாண்டி அலி

புத்ரா ஜெயா – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலியின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி தனது பதவிக்கால நீட்டிப்புக் கடிதத்தைப் பெற்றதாக முகமட் அபாண்டி தெரிவித்தார்.

இதன் மூலம் 2021 வரை அபாண்டி அலி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நீடிப்பார்.

#TamilSchoolmychoice

68 வயதான அபாண்டி அலி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலுக்குப் பதிலாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கனி பட்டேல் சேவை அவரது உடல் நலக் குறைவால் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சவுதி அரேபிய அரச குடும்பத்தினரிடமிருந்து பிரதமர் நஜிப் நன்கொடை பெற்ற விவகாரத்தையும், 1எம்டிபி விவகாரத்தையும் கனி பட்டேல் விசாரிக்க முற்பட்ட காரணத்தினால்தான் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என அப்போது கூறப்பட்டது.

அவரைத் தொடர்ந்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பொறுப்பை ஏற்ற அபாண்டி அலி, 1 எம்டிபி விவகாரத்தில் நஜிப் எந்தத் தவறும் செய்யவில்லை என அறிவித்தார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் அபாண்டி அலி கூட்டரசு நீதிமன்ற (பெடரல் நீதிமன்றம்) நீதிபதியாகப் பதவி வகித்தார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் அரசாங்கத்தில் பல்வேறு சட்டத் துறை பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

தனது பதவியின் மூலம் சட்ட, நீதி, நிர்வாகத்தைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பொறுப்புணர்வுடன் நிர்வகித்து வரப்போவதாகவும் அபாண்டி அலி தெரிவித்திருக்கிறார்.