
பெட்டாலிங் ஜெயா – நீண்ட காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் இல்லத்திற்கு நேரில் சென்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.
குலசேகரனை டான்ஸ்ரீ சுப்ராவின் மகன் டத்தோ சுந்தர் சுப்பிரமணியம் வரவேற்று தனது தந்தையின் உடல் நலம் குறித்தும், அவர் பெற்று வரும் சிகிச்சைகள் தொடர்பான விவரங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

பின்னர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் குடும்பத்தினருடன் அளவளாவிய பின்னர், அவர்களுடனான தேநீர் விருந்துபசரிப்பிலும் குலசேகரன் கலந்து கொண்டார்.
முன்னாள் துணையமைச்சரும், மஇகா தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ சுப்ரா 2011 முதல் உடல் நலம் குன்றி இல்லத்தில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.