Home நாடு வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாறும்!

வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாறும்!

697
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாற்றப்படும் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தமக்கும் பிரதமர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாக இணையச் செய்தித் தளங்களும், சமூக ஊடகங்களும் பொருத்தமற்ற வதந்திகளைப் பரப்பி வருவதாக அன்வார் தெரிவித்தார்.

பெர்சாத்து கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதமர் மகாதீரை, அவருடைய பதவி காலம் முடிவடையும் வரையில் பதவியில் நிலைத்திருக்குமாறு கூறியதன் விளைவாக இம்மாதிரியான ஊகங்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.   

#TamilSchoolmychoice

“நாம் தோல்வியடைந்து நிற்பதைக் காண்பதற்கு ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான போலி முகங்களை உடையவர்கள் குடும்ப அரசியல் கலாசாரம், செல்வத்தைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் மக்களுடைய நீதியையும் நலனையும் புறக்கணிப்பதில் தீவிரமாக செயல்படுபவர்கள். இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என அன்வார் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவை ஒரு வளமிக்க, பாதுகாப்பான நாடாக உருமாற்றுவதில் கவனத்தைச் செலுத்தி, அதற்கான பாதையில் முன்னோக்கி நகர வேண்டுவதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் கேட்டுக் கொண்டார்.