பிரதமர் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளும் பரிந்துரைகளும் 2019 ஜனவரி 18-ஆம் நாள் கேமரன் மலையில் நடைபெற உள்ள தேசிய பூர்வகுடி மக்கள் மாநாட்டில் முன்வைக்கப்படும்.
பூர்வகுடி மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பூர்வகுடியைச் சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை ஆணையப் (சுஹாகாம்) பிரதிநிதிகள், பூர்வ குடி மேம்பாட்டுத் துறைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் சர்ஜித் சிங் கில் வழிநடத்திய இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள், பூர்வகுடி மக்கள், அவர்களின் அவல நிலை குறித்தெல்லாம் போதிய அளவுக்கு ஆலோசிக்கப் பட்டுவிட்டதாகத் தெரிவித்த அதேவேளை, முந்தைய அரசு பாராமுகமாக இருந்த பூர்வகுடி மக்கள் மீதான மனித உரிமை ஆணைய அறிக்கை குறித்து தற்போதைய அரசு அதிக அக்கறைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
பூர்வகுடி மக்களின் சிக்கலைக் களைவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிடும்படி 2018 அக்டோபரில் பூர்வகுடி மேம்பாட்டுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையிலும், இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி பூர்வகுடி கிராமங்களுக்கு மேற்கொண்ட அதிகமான பயணங்களின்வழி நேரில் கண்டறிந்ததாக இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.