Home உலகம் கென்யா: 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், 50 பேர்களின் நிலை கேள்விக்குறி!

கென்யா: 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், 50 பேர்களின் நிலை கேள்விக்குறி!

1545
0
SHARE
Ad

கென்யா: நேற்று (புதன்கிழமை) நைரோபி நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்ற ஐந்து தீவிரவாதிகளை கென்யாவின் பாதுகாப்புப் படைகள் கொன்று விட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் போது, மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக தப்பி ஓடும் காணொளிகள் வெளியிடப்பட்டன.

ஆயினும், அக்கட்டிடத்தினுள் இருக்கும் மேலும் 50 பேர்களின் நிலை என்னவாயிற்று என்பது புதன்கிழமை மாலை வரையிலும் தெரியவில்லை என கென்யா செஞ்சிலுவை இயக்கம் கூறியது. பலர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் அச்சமும் அரசு தரப்பினரிடையே எழுந்துள்ளது.

கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளின் உடல்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்து, ஜனாதிபதி உஹுரு கென்யாத்தா (Uhuru Kenyatta), இச்சம்பவம் முற்று பெற்று விட்டதாகவும், கடந்த 2013-ல் வெஸ்ட்கேட் வியாபார மையத்தில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வினை நினைவூட்டும் வண்ணம் உள்ளதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

சோமாலி அல் ஷபாப் தீவிரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியதாகவும், இஸ்லாமிய தீவிரச் சட்டத்தினை நிலைநிறுத்தவும், அமெரிக்க அதிபர், ஜெருசேலமை இஸ்ரேலின் தலைநகரம் என அறிவித்தற்கும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியது.

கென்யா அரசு மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதனை குறிப்பிடவில்லை, ஆயினும், கண்காணிப்பு காமிரா கருப்பு உடையில் ஐந்து பேர் இருந்ததைக் காட்டியது.