Home நாடு டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா மன்னிப்பு கோரினார்

டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா மன்னிப்பு கோரினார்

963
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தனது கருத்துகளுக்கு அறிவிப்பாளர் உதயா மன்னிப்பு தெரிவித்திருக்கிறார்.

உதயாவின் கருத்துகளுக்கு எதிராக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கமும் தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்ததைத் தொடர்ந்து, டிஎச்ஆர் வானொலியின் நிர்வாகத்தினர் தமிழ்ப் பத்திரிக்கை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டும், தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னனுடன் செல்லியல் தொடர்பு கொண்டபோது, இந்தத் தகவல்களை உறுதிப்படுத்திய அவர், தங்களின் சங்கத்தினர் இந்தப் பிரச்சனையைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு வந்த உதயா தனது கருத்துகளுக்கு மன்னிப்பு தெரிவித்தார் என்றும் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து உதயா தனது மன்னிப்பைப் பதிவு செய்யும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. “தமிழ்ப் பத்திரிகை ஒன்று மூடப்பட்டது தொடர்பில் நடத்தப்பட்ட அந்த உரையாடல் வானொலியில் இடம் பெறவில்லை. மாறாக அந்த உரையாடல் வானொலி ஒலிபரப்புக்கு வெளியே (Off Air) பதிவு செய்யப்பட்டது. அதை யாரோ ஒலிப்பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்கள். எனினும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த காணொளியில் உதயா கூறியிருக்கிறார்.

உரையாடலில் பேசப்பட்டது என்ன?

அந்த உரையாடலில், வானொலி நேயர் ஒருவர், பெயர் குறிப்பிடாமல், தமிழ்ப் பத்திரிக்கைகளைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரிதாக இருக்கின்றன, அவற்றைக் கீழே விரித்துப் படுக்கத்தான் லாயக்கு, சோறு மடிக்கத்தான் லாயக்கு, தமிழ்ப் பத்திரிகைகள் தேவையற்ற குப்பைச் செய்திகளை வெளியிடுகின்றன, அவற்றை இழுத்து மூட வேண்டும் என்றெல்லாம் அந்த வானொலி நேயர் பேசிக் கொண்டே செல்ல, அதற்கேற்ப உதயாவும், அந்நபருக்கு ஒத்து ஊதுவது போலவும், ஒப்புக் கொள்வது போலவும் பேசுகிறார்.

சமூக செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை, மாறாக டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ என பெரிய மனிதர்களின் நிகழ்ச்சிகளை மட்டுமே வெளியிடுகின்றன என்றும் அந்த வானொலி நேயர் அந்த உரையாடலில் சாடியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் தவிர்க்க முயற்சி செய்யாமல், அந்த நேயர் கூறும் கருத்துகளுக்கு மறுப்பு சொல்லாமல், மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே உதயா அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறார்.

இதுபோன்ற உரையாடலை டிஎச்ஆர் வானொலி ஒலிபரப்பியதா – அல்லது வானொலியில் இடம் பெறாத உரையாடல் இது என்றால் அதனை ஒலிப்பதிவு செய்தது யார், வெளியிட்டது யார் என்பது போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

தமிழ் மொழி வானொலி ஒன்று இவ்வாறு செய்திருப்பது – தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் அதே தமிழ் மொழியைப் பயன்படுத்தி வணிக ரீதியாக செயல்படும் தனியார் வானொலியும், அதன் தமிழ் அறிவிப்பாளரும் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

எனினும் அந்த உரையாடல் டிஎச்ஆர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)