கோலாலம்பூர் – மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு குணமடைந்து வரும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.
அவரைப் பலரும் சந்தித்து வருகிறார்கள்.
நேற்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது துணைவியாரும், துணைப் பிரதமருமான வான் அசிசாவுடன் அஸ்மின் அலியை அவரது இல்லம் சென்று கண்டு நலம் விசாரித்தார்.
#TamilSchoolmychoice
இந்த சந்திப்பின்போது சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் உடனிருந்தார்.
அன்வாருக்கும், அஸ்மினுக்கும் இடையில் சுமுக உறவு இல்லை என்ற ஆரூடங்கள் பரவி வரும் நிலையில் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடல் நலம் பெற்றுவரும் தனது நீண்ட கால அரசியல் சகா மற்றும் கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் அஸ்மினை அன்வார் சந்தித்தார் என்றாலும், அவர்களுக்கு இடையில் இருக்கும் நட்புறவு தொடர்ந்து நீடிக்கிறது, வலுவாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக இந்தச் சந்திப்பு அமைந்திருக்கிறது.