Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா?

சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா?

724
0
SHARE
Ad

புதுடில்லி – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் மறைமுகமாக இந்தியாவுக்கு இலாபகரமானதாக அமையலாம் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடைகள், விவசாயம், வாகனங்கள், இயந்திரங்கள் போன்ற துறைகளில் இந்தியாவும் வலுவான ஏற்றுமதி சந்தையைக் கொண்டிருக்கிறது என்பதால் அமெரிக்க, ஐரோப்பிய வணிகர்கள் இனி இந்தியாவிலிருந்து இந்தத் துறை உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு தங்களின் கவனத்தைத் திருப்பக் கூடும் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, பின்னலாடைகள், ஆடைகள், பருத்தி ஆடைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிலேயே முன்னணி வகிக்கும் மாவட்டம் திருப்பூர் என்பது அனைவரும் அறிந்ததுதான்!

அமெரிக்கா-சீனா வணிகப் போரினால், ஆடைகளுக்கான ஏற்றுமதிக்கான விண்ணப்பங்கள் திருப்பூரை நோக்கிக் குவியும் என சில வணிக ஊடகங்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளன.

அண்மையக் காலத்தில் திருப்பூரின் சில ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதலான உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா மேற்கொள்வதால், இனி அமெரிக்கா போன்ற சந்தைகளில் பயனீட்டாளர்கள் செலுத்தப்போகும் விலைகள் இயல்பாகவே உயரத் தொடங்கும்.

இதனால், வரிவிதிப்புக்கு ஆளாகாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் அதன்மூலம் பயனீட்டாளர்கள் செலுத்தும் விலைகளையும் குறைக்க முடியும் என்பதோடு, சந்தை விலையையும் அமெரிக்க நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 4400 கோடி ரூபாய்க்கும் கூடுதலான பின்னலாடைகளை (Fabrics) திருப்பூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்திருக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏற்றுமதிகள் அடுத்து வரும் மாதங்களில் அதிக அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.