Home வணிகம்/தொழில் நுட்பம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

1659
0
SHARE
Ad

சென்னை – பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டைச் சென்னையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதென பன்னாட்டு நிறுவனமான உத்தமம் நிறுவனமும் அண்ணா பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.  இம்மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20-22 (2019) திகதிகளில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

இது குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை உத்தமம் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சிங்கப்பூரைச் சார்ந்த எஸ். மணியம் அவர்களும் அண்ணாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சூரப்பா அவர்களும் அறிவித்தனர். உத்தமம் நிறுவனம் 1997ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கொரு முறை கணினித் தமிழ் ஆய்வு குறித்த மாநாட்டை உலகின் பல நாடுகளில் நடத்திவந்துள்ளதை நாம் அறிவோம்.

இம்மாநாடுகள் உலகெங்கிலும் பலநாடுகளில் நடைபெற்றிருக்கின்றன. சிங்கப்பூர், மலேசியா, செர்மனி, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் இதுவரை பதினேழு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தித் தமிழுக்கும் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கும் பலவகையிலும் இந்நிறுவனத்தினர் துணைபுரிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் பன்னாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்களின் ஆராய்ச்சிகள் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு மகத்தான தொண்டுகளைச் செய்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ம.இளந்தமிழ்

பேராசிரியர்கள் மு. அனந்தகிருட்டிணன், மு. பொன்னவைக்கோ, அப்பாசாமி முருகையன் (பிரான்சு), கு. கல்யாணசுந்தரம் (சுவிஸ்) வாசு அரங்கநாதன் (அமெரிக்கா) சி.ம. இளந்தமிழ் (மலேசியா) மணியம் ( சிங்கப்பூர்) மற்றும் தவரூபன் ( இலங்கை ) போன்றோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் அண்ணாப் பலகலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் பதினெட்டாவது மாநாட்டின் மையக் கருத்தாகத் “தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” (Tamil Robotics and Language Processing) என இருக்கும் என இம்மாநாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.  தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற மாநாட்டு மையக்கருத்தின் நோக்கம் தமிழ்க் கணினி பயன்பாட்டில் வன், மென்பொருள்களைக் கொண்டு குறிப்பாகக் கண், செவியில் ஊனமுற்றோருக்கு அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள், கல்வி, கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்வதும் ஒரு நோக்கமாக இருக்கும்.

இத்துறையில் தொழில் நுட்ப முன்னேற்றங்களைக் குறித்துப் பலர் சிறப்புச் சொற்பொழிவும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைக்கவுள்ளனர். இக்கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிறந்த தமிழ்க் கணினி நிரலுக்கோ இணையப் பக்கங்களுக்கோ சிறப்புப் பரிசு வழங்கப்பட்டு மாநாட்டு அரங்கில் சிறப்பு செய்யப்படும் எனவும் உத்தமம் மற்றும் அண்ணாப் பல்கலைக்கழக மாநாட்டு அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.  இது தமிழ் மொழியியல் ஆய்வையும் தமிழ்க்கணினி ஆய்வையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என மாநாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.

மேலும் முன்பு நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளைப்போல் இம்முறையும்  தமிழ்மொழியில் கணினி பயன்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT), தமிழில் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing), கணினி உதவியுடன் தமி̀ழ் மொழி கற்றல் – கற்பித்தல் (Computer-Aided Learning and Teaching of Tamil), தமிழ் இணையம் உள்ளடக்கம் (Tamil Internet), தேடு பொறிகள், பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (Search Engines and “Big Data” analysis), மின்னூலகங்கள் (Digital Libraries), தமிழ் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மை (Tamil Web Development and Content Management) போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவின் தலைவராகப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வாசு அரங்கநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இரஞ்சனி பார்த்தசாரதி, டீ.வி கீதா மற்றும் ல. ஷோபா அவர்களும் இக்குழுவில் பங்குபெற்று மாநாட்டுக் கட்டுரைகளைத் தரப்படுத்தவும் சிறந்த கட்டுரைகளை நூலாக வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட முன்வந்துள்ளனர்.

கட்டுரைகளை கீழ்க்காணும் இணையத் தளம் மூலம் வரும் ஜூன் மாதம் 1ம் திகதிக்குள் அனுப்பவேண்டும் என மாநாட்டு நிகழ்ச்சிக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

https://easychair.org/conferences/?conf=tic2019

இது பற்றிய மேலதிகத் தகவல்கள் கீழ்க்காணும் இணையப் பக்கத்தில் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும் எனவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.tamilinternetconference.org