Home இந்தியா பன்னாட்டு கணித் தமிழ் 24 மாநாடு – பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது

பன்னாட்டு கணித் தமிழ் 24 மாநாடு – பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது

1042
0
SHARE
Ad

சென்னை: தமிழ்க் கணினி உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பன்னாட்டுத் கணித்தமிழ் 24 மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாகத் தொடக்க விழா காண்கிறது.

தமிழ் நாட்டின் தகவல் தொழில்நுட்பவியல், இலக்கவியல் சேவைகள் அமைச்சர் டாக்டர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிபுணர்கள், தமிழ் மொழி அறிஞர்கள் பங்கு கொள்ளும் இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்தும் பேராளர்கள் பங்கு பெறுகின்றனர். ஆய்வுக் கட்டுரைகளும் படைக்கவிருக்கின்றனர்.

முத்து நெடுமாறன்
#TamilSchoolmychoice

கணித்தமிழ் 24 மாநாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பன்னாட்டு நிபுணர்களைக் கொண்ட ஆலோசனக் குழுவில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறனும் அங்கம் வகிக்கிறார். கணித் தமிழ் 24 மாநாட்டுக்கான பன்னாட்டு ஆலோசனைக் குழுவில் மலேசியாவில் இருந்து முத்து நெடுமாறன் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். தமிழ் மென்பொருள் உருவாக்கம், கையடக்கக் கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில் நுட்பம், எழுத்துருவியல் போன்ற துறைகளில் நீண்ட காலமாக தன் நிபுணத்துவ பங்களிப்பை அனைத்துலக அளவில் முத்து நெடுமாறன் வழங்கி வந்திருக்கிறார்.

இந்த மாநாட்டில் கண்காட்சி அரங்குகளும் இடம் பெறுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் படைத்தல், குழு விவாதங்கள், நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மை உரைகள், நிரலாக்கப் போட்டிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஸ்டார்ட் அப் என்னும் புத்தாக்க ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை அமைப்பதற்கான ஊக்குவிப்பு களமாகவும் இந்த மாநாடு திகழும்.

இணைய உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்று தமிழ். உலகெங்கிலும் உள்ள பல கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ் மொழியின் பயன்பாடு இணையத் தளங்களிலும், கணினிகளிலும் – கால ஓட்டத்தில் கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளிலும் பரவி வளர –  எழுத்துருவாக்கம், தமிழ் மென்பொருள் – என கணினியை மையப்படுத்தி பலமுனைகளிலும் பாடுபட்டிருக்கின்றனர்.

கணினித் தமிழ் அபரிதமான வளர்ச்சி அடைவதற்கு வித்திட்ட முதல் களங்களில் ஒன்று – மறைந்த முதல்வர் கருணாநிதியின் தலைமையில் 1999–ல் ‘தமிழ்இணையம்99’ என்னும் பெயரில் நடத்தப்பட்ட மாநாடாகும்.

‘தமிழ் இணையம் 99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணையம் மூலமாக தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும்.

1999 மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ‘தமிழ்99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழக அரசு இந்த தமிழ் இணைய மாநாட்டை முன்னெடுக்கிறது.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் தலைமையில் 1999–ல் ‘தமிழ்இணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழக அரசு இந்த மாநாட்டின் மூலம் தமிழ்க் கணினி உலகில் புத்தாக்கமும் புதுவடிவமும் ஏற்பட முயற்சிகளை எடுத்திருக்கிறது.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது.

‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. செயற்கை நுண்ணறிவு அண்மைக் காலத்தில் பெருமளவில் அறிவியல் உலகில் மேம்பாடு கண்டு வருகிறது.

வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு மேலும் அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும்.

தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை ஒருங்கிணைக்கும். புது யுகத்துக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் புத்தொளி பெற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

ஆங்கிலத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.

மறைந்த முதல்வர் கருணாநிதி நடத்திய ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடைபெற்ற அதே நாளில் (2024 பிப்ரவரி 8, 9, 10)  பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு (கணித்தமிழ்24) கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பது சிறப்பான ஒன்றாகும்.

தமிழகத்திலும், இந்திய அளவிலும், அனைத்துலக அளவிலும் தமிழுக்காகப் பங்களித்துவரும் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிக் கொண்டுவரும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறும். செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை உள்ளிட்ட தளங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் பன்னாட்டு மாநாடு அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை எதிர்கொள்வதற்கான அடித்தளங்களை அமைத்துத் தரும்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணித்தமிழ் தொடர்பாக நடந்திருக்கும் விவாதங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் முதலியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மலர் ஒன்றும் இந்தப் பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படும். இம்மாநாட்டுக்கென சிறப்பு இலச்சினை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை முன்னோடியாக தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.kanitamil.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.