முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரி ஒருவர் மர்மக் கொலைகளை துப்புத் துலக்கும் படம். எந்தவித மசாலாவும் கலக்காமல், நேரடியாக விறுவிறுப்பாக கதையைச் சொல்லியிருக்கிறார்கள். நிறைய இடங்களில் கதாபாத்திரங்கள் குறிப்பாக போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டே இருந்தாலும், போரடிக்கவில்லை. கொலையின் மர்மத்தைப் பற்றிப் பேசுவதால் சுவாரசியமாகவே இருக்கிறது.
கதையும் – திரைக்கதையும்
முதலில் ஒரு கொலையோடு தொடங்கும் படத்தில் அடுக்கடுக்கான கொலைகள் இல்லை. மொத்தம் நடப்பது மூன்றே கொலைகள்தான். அதிலும் நடப்புக் கதையில் இரண்டே கொலைகள்தான். முதல் கொலை ‘பிளாஷ்பேக்’ கொலையாக – முன்பு நடந்த கொலையாக – காட்டப்படுகிறது.
அவரது பின்புலம் என்ன, ஏன் அந்தக் கொலையைச் செய்தார் எனக் கதை விரிகிறது. எனினும் பிரபாகரனாக வரும் விஜய் ஆண்டனியின் சில ஒப்புதல் வாக்குமூலங்களை அர்ஜூன் நம்ப மறுக்கிறார். அர்ஜூனுக்கு ஆலோசனைகள் கூறி உதவி செய்வது ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துறையின் உயர் அதிகாரி நாசர். இருவரும் இருவித கோணங்களில் சிந்தித்து கொலையின் பின்னணியை விவாதிப்பது படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
படத்தின் மற்ற அம்சங்கள்
இரண்டு பாடல்கள் என்பதைத் தவிர, நகைச்சுவையோ, மற்ற வழக்கமான மசாலாக் கலவைகளோ இல்லை. விறுவிறுவென்று கதை சொல்லியிருப்பதால் மொத்த படமுமே ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரிகளின் பார்வைக் கோணத்திலும், கொலைகாரனின் கோணத்திலும் கதையைக் கொண்டு போயிருப்பதால் நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.
கதாநாயகி, அஷிமா நர்வால் இரசிக்க முடியவில்லை. காதல் காட்சிகளில் மட்டும் விஜய் ஆண்டனியோடு நெருக்கம் காட்டுகிறார்.
தமிழில் ஒரு நல்ல மர்மப் படத்தைப் பார்த்த திருப்தி! முடிந்தால் தவற விடாதீர்கள்!