Home உலகம் கிரிக்கெட் : இந்தியா தோல்வி – நியூசிலாந்து வெற்றி

கிரிக்கெட் : இந்தியா தோல்வி – நியூசிலாந்து வெற்றி

2081
0
SHARE
Ad

மான்செஸ்டர் – (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இன்று இங்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து இந்தியா சோகத்துடன் வெளியேறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 23 பந்து வீச்சுகளே எஞ்சியிருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்று மலேசிய நேரப்படி மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய  ஆட்டத்தில், அடுத்தடுத்து இந்திய விளையாட்டாளர்கள் அபாரமாகப் பந்து வீசியதால் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து 239 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இன்றைய இரண்டாவது பாதி ஆட்டத்தில் 240 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது.

எனினும் 49.3 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 221 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டம் புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்ட் டிராஃப்போர்ட் அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் இதுவரையில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் எந்த குழு முதலில் பேட்டிங் செய்ததோ அந்தக் குழுதான் வெற்றி பெற்றிருக்கிறது.

இன்றைய ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்தே வெற்றி பெற்று அந்த நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை  வியாழக்கிழமை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும்.உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைச் சந்திக்கும்.