கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் (Kuala Lumpur Selangor Indian Chamber of Commerce and Industry) 90-வது ஆண்டு நிறைவு விழாவில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி போன்று இந்திய பாணியில் உடையணிந்து கலந்து கொண்ட அன்வார் அந்த உடை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.
“இந்த விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்தபோது கறுப்பு நிற கோட் மட்டும் கறுப்பு கழுத்துப் பட்டை (டை) அணிந்து வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நான் இந்த இந்திய உடையில் வரத் தீர்மானித்தேன். இந்த இந்திய உடை அணிவதால் நான் இன்னும் கூடுதலாக மலாய்க்காரராகவும், அதைவிடக் கூடுதலாக மலேசியராகவும் உணர்கிறேன்” என பலத்த கரவொலிகளுக்கிடையில் அன்வார் கூறினார்.
#TamilSchoolmychoice
இந்த நிகழ்ச்சியில் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், துணையமைச்சர் சிவராசா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சிறந்த இந்திய வணிகர்களுக்கு சாதனை விருதுகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.