பேங்காக் – தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இயங்கும் டெஸ்கோ பேரங்காடி வணிகங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் முன்வந்திருப்பதை அடுத்து, அந்த வணிகங்களையும், அதன் தொடர்புடை சொத்துகளையும் வாங்குவதற்கு தாய்லாந்தின் பெரும் வணிகர்கள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய தென்கிழக்காசியாவின் டெஸ்கோ வணிகத்தை வாங்குவதற்கு தாய்லாந்தின் சிராத்திவாட் குடும்பம் ஆர்வம் காட்டியுள்ளது.
சென்ட்ரல் குரூப் என்றும் சிபி குரூப் (CP Group and Central Group) என்றும் அழைக்கப்படும் வணிகக் குழுமமும் தனது நிதி ஆலோசகர்களோடு இணைந்து டெஸ்கோவை வாங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளது.
சாரோன் சிரிவதனபக்டி என்ற தாய்லாந்து கோடீஸ்வரரின் ஆளுமையின் கீழ் செயல்படும் டிசிசி குரூப் எனப்படும் நிறுவனமும் டெஸ்கோவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.
தனது தென்கிழக்காசிய வணிகங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை அப்படியே தனது பிரிட்டன் டெஸ்கோ வணிகத்தில் முதலீடு செய்து தங்களின் பிரிட்டிஷ் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யவும் டெஸ்கோ திட்டமிட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புகளின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பிரிட்டனில் வேலைகளை இழப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரங்காடிகளை டெஸ்கோ லோட்டஸ் என்ற பெயரில் அந்நிறுவனம் நடத்தி வருகிறது.
மலேசியாவில் 70-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை டெஸ்கோ கொண்டுள்ளது.
மலேசியாவின் சைம் டார்பி பெர்ஹாட் நிறுவனம் டெஸ்கோ மலேசியா நிறுவனத்தில் 30 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது.





