Home One Line P1 “மகாதீர் பிரதமராக நீடித்திருக்க சாஹிட் ஹமீடி பலருடன் பேச்சுவார்த்தை!”- லோக்மான்

“மகாதீர் பிரதமராக நீடித்திருக்க சாஹிட் ஹமீடி பலருடன் பேச்சுவார்த்தை!”- லோக்மான்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன், அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஒலிநாடாவை வெளியிட்டது  குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.

முன்னாள் அம்னோ உச்சமன்றக்குழு உறுப்பினரான அவர், கட்சியின் இரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் எந்த செயலையும் தாம் செய்யவில்லை என்று தற்காத்துப் பேசினார்.

“எனது பொது சீற்றம் என்னவென்றால், 3.7 மில்லியன் அம்னோ உறுப்பினர்களை துன் டாக்டர் மகாதீரை புதிய பக்காத்தான் நேஷனல் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தலைவர் கட்டாயப்படுத்துவதுதான்”

#TamilSchoolmychoice

“அம்னோ அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகும்” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பக்காத்தான் நேஷனல் அல்லது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஊகங்களை லோக்மான் பிப்ரவரி 3 அன்று வெளிப்படுத்தினார்.

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு மகாதீருடன் இணைந்து பணியாற்ற விரும்பியதற்காக சாஹிட் பலவீனமானவர் என்று லோக்மான் விமர்சித்தார்.

ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு காணொளியில், லோக்மான் சாஹிட்டின் உரையை மேற்கோள் காட்டி இருந்தார்.

முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தின் போது இந்த ஒத்துழைப்பு நடைபெற நான்கு காரணங்களை சாஹிட் கூறியதாக லோக்மான் தெரிவித்தார்.

இதனை அடுத்து ,கட்சித் தலைமையை விமர்சித்ததற்காக பிப்ரவரி 7-ஆம் தேதி அம்னோ உச்சமன்றக் குழுவிலிருந்து லோக்மானை அக்கட்சி பதவி நீக்கம் செய்தது.

எவ்வாறாயினும், சர்ச்சையைத் தூண்டிய பின்னர் பக்காத்தான் நேஷனல் அமைப்பதற்கான திட்டம் இப்போது இரத்து செய்யப்பட்டதாக லோக்மான் கூறினார்.

ஆனால், பிரதமரை ஆதரிப்பதற்காக முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தில் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“என்னை நீக்குவது குறித்த சந்திப்புக்குப் பின்னர், சாஹிட் மகாதீருக்கு ஆதரவாக சத்தியப் பிரமாணம் பெற பல நபர்களை வற்புறுத்தினார்” என்று லோக்மான் கூறினார்.

இதற்கிடையில், அம்னோ உறுப்பினராக தனது பதவி விலகல் கடிதத்தைப் பெற்றதாக லோக்மான் உறுதிப்படுத்தினார்.