Home One Line P1 “நன்கொடை பணத்தைப் பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான கடிகாரத்தை வாங்கியிருக்கக் கூடாது!” -அனிபா

“நன்கொடை பணத்தைப் பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான கடிகாரத்தை வாங்கியிருக்கக் கூடாது!” -அனிபா

597
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சவுதி அரேபியா நன்கொடையின் பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர கடிகாரத்தை வாங்கியது சரியான காரியமல்ல என்று உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையில் முன்னணி வழக்கறிஞர் டத்தோ வி.சிதம்பரம் மேற்கொண்ட குறுக்கு விசாரணையின் போது இதனை முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் கூறினார்.

முன்னதாக தனது சாட்சி அறிக்கையில் குறிப்பிட்ட அனிபா அமான், மறைந்த மன்னர் அப்துல்லா அப்துல் அசிஸ், தனது பண பங்களிப்பை “தெளிவற்ற முறையில் வழங்குவதை” விரும்பவில்லை என்று கூறியிருந்ததை குறிப்பிட்டிருந்தார். ஏனெனில் அவ்வாறு செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவர் அதனைக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தெளிவற்ற முறையில் வழங்கப்பட்டது” என்பதன் அர்த்தத்தை விளக்குமாறு சிதம்பரம் சாட்சியைக் கேட்ட போது, அதற்கு அனிபா “நான் அதைப் பற்றி மன்னர் அப்துல்லாவிடம் கேட்க வேண்டும்.” என்று கூறினார்.

சிதம்பரம்: இது வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் சொன்னீர்கள். இதை நஜிப் சொன்னார் என்று சொன்னீர்கள். இதன் பொருள் என்ன?

அனிபா: இது சரியானதைப் பொறுத்து செய்யப்பட வேண்டும்.

அரை மில்லியனுக்கும் நிகரான கடிகாரத்தை வாங்குவது சரியா என்று கேட்ட போது, அனிபா “நிச்சயமாக இல்லை,” என்று கூறினார்.

கடந்த 2014-இல் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு 130,625 அமெரிக்க டாலர்களுக்கு (466,330.11 ரிங்கிட் ) கைகடிகாரத்தை பிறந்தநாள் பரிசாக வாங்கினார்.