Home One Line P2 நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து

நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து

618
0
SHARE
Ad

புதுடில்லி – இங்குள்ள நிசாமுடின் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களில் 275 பேர்களை டில்லி காவல் துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 960 வெளிநாட்டவர்களின் குடிநுழைவு அனுமதியையும் உள்துறை அமைச்சு இரத்து செய்துள்ளது. இந்த 960 பேர்களில் கைது செய்யப்பட்டவர்களும் அடங்கியிருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சி குறித்த செய்திகள் வெளியானபோதே, இந்த நிகழ்ச்சியில் மலேசியர்களும், இந்தோனிசியர்களும் நிறைய அளவில் கலந்து கொண்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும், டில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில், குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாரும் இருக்கின்றனரா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வெளிநாட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நேற்று வரையில் நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 400 பேர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய (வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3) தகவல்களின்படி இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யப்பட 544 பாதிப்புகளில் 65 விழுக்காடு நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2599 ஆக அதிகரித்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரலையாக தொலைக்காட்சிகளின் வழி உரையாற்றவிருக்கிறார். இந்த உரையில் அவர் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.