இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நல்வாழ்த்துகளை மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான சரவணன் தெரிவித்துக் கொண்டார்.
“கொவிட்19 பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் சிரமமான நடப்பு நிலைமையில் மனித நேயத்தையும், ஒருவருக்கொருவர் உதவுவதையும், அமைதியையும், வாழ்க்கையில் நிலையாமையையும், மரணம் குறித்தும் போதித்த புத்தரின் அறிவுரைகள் அனைவரும் உணர்ந்து பின்பற்றத் தக்கவையாகும்” என தனது வாழ்த்துச் செய்தியில் சரவணன் குறிப்பிட்டார்.
“எல்லா இனங்களையும், மதங்களையும் சரிசமமாக கௌரவமாக நடத்தும் அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம். எல்லாப் பெருநாட்களையும் ஒன்று கூடி ஊர்வலங்கள், விருந்துபசரிப்புகள் எனக் கொண்டாடி மகிழும் மலேசியர்களாகிய நாம் இந்த சோதனையான காலகட்டத்தில் அவ்வாறு செய்ய முடியாமல் இருக்கிறோம். இதனை உணர்ந்து அனைவரும் கொவிட்19 தொடர்பில் அமுல்படுத்தப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு விசாக தினத்தைக் கொண்டாடி மகிழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் சரவணன் தனது விசாக தின செய்தியில் தெரிவித்தார்.