Home One Line P1 நாயை தூக்கிலிட்டு துன்புறுத்திய நபர் மனநோயாளி

நாயை தூக்கிலிட்டு துன்புறுத்திய நபர் மனநோயாளி

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாய் ஒன்று வாய் கட்டப்பட்டு, மரத்தில் கயிரால் தொங்கவிடப்பட்ட காணொளி நேற்று சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்நபருக்கு மனநோய் இருப்பதாகவும் கோலா லங்காட் மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிசான் துகிமான் பெர்னாமாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

45 வயதான அந்நபருக்கு வேலையில்லை, அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பந்திங் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் பந்திங் கிளையின் கால்நடை சேவைகள் துறையின் விலங்கு நலப் பிரிவுக்கு, பத்து 17, சுங்கை செடு, பாந்திங்- கிள்ளான் சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

“ஆரம்ப பரிசோதனையில் அவ்விலங்கு பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. விலங்கு நலச் சட்டம் 2015 (சட்டம் 722) இன் படி இந்த வழக்கை விலங்கு நலப் பிரிவு விசாரித்து வருகிறது.”

“இந்த நபர் விலங்கு நலப் பிரிவால் இரவு 11 மணியளவில் தனது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உதவுவதற்காக (நேற்று) காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று அவர் தெரிவித்தார்.

“நாயை விடுவிக்கும்படி அவர்கள் அந்த ஆடவரிடம் கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டார். எச்சரிக்கப்பட்ட பின்னர், அவர் அதனை விடுவித்தார். பின்னர், அவ்விலங்கு விலங்கு நலப் பிரிவினால் சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டது. ” என்று அவர் குறிப்பிட்டார்.