Home One Line P2 எல்லைப் புறங்களில் அமைதி காக்க சீனா-இந்தியா இணக்கம்

எல்லைப் புறங்களில் அமைதி காக்க சீனா-இந்தியா இணக்கம்

545
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்திய-சீன எல்லைப் புறங்களில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த பதற்றநிலை நிறுத்தப்படுவதற்கு இரு தரப்புகளிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற இந்திய-சீன தரப்புகளின் அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு காணப்பட்டது.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. இந்திய-சீன தூதரக உறவுகள் உருவாகி இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இருநாடுகளும் எல்லைப் பகுதியில் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக, வணிக ரீதியில் சுமுகமான உறவுகள் நீடிக்க எல்லைப்பகுதிகளில் அமைதியும் பதட்டம் அற்ற சூழ்நிலையும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இரு நாடுகளும் உணர்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் தங்களின் துருப்புக்களை எண்ணிக்கை குறைத்து மீட்டுக் கொள்வதற்கும், ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட சில நிர்மாணிப்புகளை அகற்றுவதற்கும் ஒப்புதல் காணப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா-சீனா இடையிலான இராணுவ மற்றும் தூதரக நிலையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் உச்ச கட்டமாக நேற்று இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

தொடர்ந்து எல்லைப்புறங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க இராணுவ மற்றும் தூதரக பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியை நிலை பெறச் செய்யவும் இருநாடுகளும் பாடுபடும் என்றும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

நேற்று சனிக்கிழமை நடந்த மூன்று மணிநேர சந்திப்புக் கூட்டத்தை தொடர்ந்து சில உடன்பாடுகள் காணப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன