“இப்போது பெறப்பட்ட கேள்விகளுக்கான பதிலில், அடுத்த ஆண்டு ஜூலை 6 அன்று, உலக சுகாதார நிறுவனத்தின் 1946 அரசியலமைப்பின் விதிப்படி அமெரிக்கா விலகுவது அமலுக்கு வருகிறது. ” என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நிருபர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
” 1948-ஆம் ஆண்டு ஜூன் 21 முதல் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இணைந்தது . உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்காவின் பங்களிப்பை உலக சுகாதார சபை ஏற்றுக்கொண்டது. “என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், கொவிட்-19 பாதிப்புகளுக்கு காரணம் ஐநாவின் கீழ் இயங்கும் உலக சுகாதார நிறுவனம்தான் என ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புக்கான அமெரிக்காவின் நிதி உதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்திருந்தார்.
“தனது அடிப்படைக் கடமைகளில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டது. கொவிட் -19 பரவலுக்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும். சீனா வழங்கிய தவறான தகவல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் இந்த உலகப் பிரச்சனைக்கு அந்த அமைப்புதான் காரணம்” என்று சரமாரியாக டிரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார நிறுவனத்திற்கு 2019 ஆண்டில் மட்டும் அமெரிக்கா 400 மில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறது. அந்த அமைப்பில் மொத்த வரவு செலவில் இது சுமார் 15 விழுக்காடு பங்களிப்பாகும்.
மே மாதத்தில், டிரம்ப் உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ்க்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அனைத்துலக அமைப்பு 30 நாட்களுக்குள் முன்னேற்றத்திற்கான செய்தியை உறுதியளிக்காவிட்டால், நிரந்தரமாக நிதியைக் குறைப்பதாகவும், உறுப்பியத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் அச்சுறுத்தியிருந்தார்.
ஏப்ரல் நடுப்பகுதியில் டிரம்ப் தனது நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதைக் குறைப்பதாக அறிவித்தது. பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நிலையில் உலகம் முழுவதும் கடுமையான விமர்சனங்களை இது பெற்றுள்ளது.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3,097,084 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 133,972 பேர் இந்த தொற்று நோயினால் மரணமுற்றுள்ளனர். உலகளவில் இந்த நோயினால் 11,950,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.