Home One Line P2 கெந்திங் உல்லாசக் கப்பல் நிறுவனத்திற்கு நிதிச் சிக்கல்!

கெந்திங் உல்லாசக் கப்பல் நிறுவனத்திற்கு நிதிச் சிக்கல்!

598
0
SHARE
Ad

ஹாங்காங் : கெந்திங் குழுமத்தின் தலைவர் லிம் கோக் தே கட்டுப்பாட்டில் ஹாங்காங்கில் இயங்கும் உல்லாசக் கப்பல் நிறுவனம் தான் திருப்பித் தரவேண்டிய கடன்களை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர முடியாமல் நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளது.

தான் வழங்க வேண்டிய கடன்களைக் கட்டத் தவறியதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 33 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன.

கெந்திங் ஹாங்காங் லிமிடெட் என்ற அந்த நிறுவனம் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கிறது. ஜூலை 31 வரை அந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன்களின் மொத்தத் தொகை 3.4 பில்லியன் டாலர்களாகும்.

#TamilSchoolmychoice

தங்கள் வசம் தற்போது இருக்கும் சொற்ப ரொக்கக் கையிருப்பைக் கொண்டு நிறுவனத்தை நடத்துவதற்கான அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே தாங்கள் செலவிடப் போவதாக கெந்திங் ஹாங்காங் அறிவித்தது.

எனவே, தங்களின் கடன்காரர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு கடன்களுக்கான மறுசீரமைப்பு பரிந்துரை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 பாதிப்புகளால் பங்கு விலை வீழ்ச்சி

தனது நிதிச் சிக்கலுக்கு கொவிட்-19 பாதிப்புகளை காரணம் காட்டியிருக்கிறது கெந்திங் ஹாங்காங். இதனால் வணிகம் பாதிக்கப்பட்டு ரொக்கக் கையிருப்பு குறைந்தது என்றும் கெந்திங் ஹாங்காங் தெரிவித்தது.

1965-ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ லிம் கோ தோங் என்பவரால் தொடங்கப்பட்டது கெந்திங் குழுமம். இன்றைக்கு சூதாட்ட மையங்கள், தோட்டங்கள், உல்லாசக் கப்பல்கள், சுற்றுலா, என பலதரப்பட்ட வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம்.

இத்தனை ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் தனது குழும பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும் நடவடிக்கையை முதன் முறையாக கெந்திங் அறிவித்தது.

நிதிச் சிக்கலில் இருக்கும் கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தின் 69 விழுக்காடு பங்குகளை டான்ஸ்ரீ லிம் கோக் தே கொண்டிருக்கிறார்.

இந்த நிதிச் சிக்கல் கெந்திங் குழுமத்தையும் பாதிக்குமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. எனினும் மிகப் பெரிய அளவில் நிலம் மற்றும் அசையாச் சொத்துகளைக் கொண்டிருப்பதால் அவற்றை விற்பதன் மூலம் நிதிப் பிரச்சனைகளை அந்தக் குழுமம் சுலபமாக சமாளிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஹாங்காங் பங்குச் சந்தையில் கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தின் பங்குகள் 33 விழுக்காடு வரை சரிவு கண்டன. இதன் தாய் நிறுவனமான கெந்திங் குழுமம் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இன்று மலேசியாவில் பொது விடுமுறையாதலால் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) கோலாலம்பூர் பங்குச் சந்தை திறக்கும்போதுதான் கெந்திங் ஹாங்காங் பங்கு விலை வீழ்ச்சி இங்குள்ள கெந்திங் குழுமத்தையும் பாதிக்குமா என்பது தெரிய வரும்.

சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்ட கெந்திங் சிங்கப்பூர் லிமிடெட் பங்கு விலைகள் இன்று வியாழக்கிழமை 1.4 விழுக்காடு வீழ்ச்சி கண்டன. சிங்கப்பூரின் இரண்டு சூதாட்ட மையங்களில் ஒன்றை கெந்திங் நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரிலும் சூதாட்ட மையங்களை கெந்திங் கொண்டிருக்கிறது.

உல்லாசக் கப்பல் பயணச் சுற்றுலாத் துறையில் முன்னணி வகித்த கெந்திங் பல உல்லாசக் கப்பல்களைக் கொண்டு சேவைகளில் ஈடுபட்டது. கொவிட்-19 பாதிப்புகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வணிகமாக உல்லாசக் கப்பல் வணிகம் திகழ்கிறது.

ஒரு சில கப்பல்கள் கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பயணிகள் பலர் கொவிட்-19 பாதிப்புகளுக்கு உள்ளானதோடு, சிலர் இறக்கும் சூழலும் ஏற்பட்டது.

1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோவின் உல்லாசப் படகு மலேசிய அரசாங்கத்தால் ஏலத்திற்கு விடப்பட்டபோது அதை கெந்திங் குழுமம்தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.