Home One Line P1 பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவர் பதவி அகற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவர் பதவி அகற்றப்பட்டது

605
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் அதிகபட்ச அதிகாரங்களை கொண்டிருந்த அவைத் தலைவர் பதவி (Chairperson) சட்டத் திருத்தங்களின் மூலம் அகற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் இயங்கலை வழியான பொதுப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.

பெர்சாத்து கட்சி அமைக்கப்பட்ட போது அதன் அவைத்தலைவராக பொறுப்பேற்ற துன் மகாதீர் கட்சியை வழி நடத்துவதற்கு அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அவைத் தலைவர் பதவியை உருவாக்கி அந்தப் பொறுப்பை தானே வைத்துக் கொண்டார்.

மொகிதின் யாசின் கட்சியின் தேசியத் தலைவராக செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஷெராட்டன் தங்கும் விடுதி ஆட்சி மாற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து மகாதீர் பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பின்னர் பெரும்பான்மை உச்ச மன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற மொகிதின் யாசின் கட்சியின் தேசியத் தலைவராக தொடர்ந்தார். பிரதமராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நேற்று கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சியின் ஏகபோக தலைவராக மொகிதின் யாசின் மட்டுமே இருந்து வருவார். இதைத் தொடர்ந்து கட்சியின் முழுமையான அதிகாரங்களை யாசின் கைப்பற்றியிருக்கிறார்.

பூமிபுத்ரா அல்லாதவர்களும் இனி உறுப்பினர்களாகலாம்

எட்மண்ட் சந்தாரா

நேற்றைய பெர்சாத்து மாநாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களில் முக்கியமானது பூமிபுத்ரா அல்லாதவர்களும் இனி இணை உறுப்பினர்களாகலாம் என்பதாகும்.

இதைத் தொடர்ந்து பூமிபுத்ரா அல்லாதவர்களும் இனி பெர்சாத்து கட்சியில் இணை உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள முடியும். அந்தக் கட்சியின் பூமிபுத்ரா அல்லாத உறுப்பினர்களில் தற்போது முக்கியப் பதவி வகிப்பவர் எட்மண்ட் சந்தாரா ஆவார்.

அமைச்சர் அஸ்மின் அலியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் எட்மண்ட் சந்தாரா கூட்டரசு பிரதேசத் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்திருக்கிறார்.