Home One Line P1 பிரதமர் உரை : முக்கிய அம்சங்கள்

பிரதமர் உரை : முக்கிய அம்சங்கள்

790
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மொகிதின் யாசின் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • பிரதமர் அறிவிப்பின்படி 8 மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
  • பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், சபா, கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பக்கப்பட்டிருக்கின்றது.
  • 6 மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பகாங், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகியவையே அந்த 6 மாநிலங்களாகும்.
  • இந்தப் புதிய உத்தரவுகள் எதிர்வரும் ஜனவரி 13 நள்ளிரவு தொடங்கி ஜனவரி 26 வரை அமுலில் இருக்கும்.
  • பெர்லிஸ், சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வரும். இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே மிகவும் தளர்வான நிபந்தனைகளைக் கொண்டிருக்கும்.
  • முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வரும் மாநிலங்களில் உணவகங்கள் செயல்பட முடியாது. பொட்டலங்கள் கட்டி மட்டுமே உணவுகள் விற்பனை செய்யப்படும். யாரும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த முடியாது.
  • சரவாக் மாநில அரசாங்கம் கூச்சிங், சிபு, மிரி ஆகிய வட்டாரங்களை இன்று நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
  • முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு, நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு நிலவும் மாநிலங்களில் கூட்டங்களுக்கும், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கும், தைப்பூசம் போன்ற திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
  • மீட்சி நிலை மாநிலங்களில் சமூக விழாக்கள் நடைபெறலாம். ஆனால் நிபந்தனைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  • மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள மாநிலங்களிலும் வட்டாரங்களுக்கிடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • பயண நடமாட்டக் கட்டுப்பாடுகளால் ஜனவரி 13 நள்ளிரவு முதல் சாலைத் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
  • 10 கிலோமீட்டருக்கு இடையிலான பயணங்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கும், பேரங்காடிகளுக்கும் ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
  • வாகனங்களிலும் ஒரு வாகனத்திற்கு இருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.
  • பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டு அத்தியாவசியத் தொழில்கள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • தொழிற்சாலைகள், தயாரிப்புத் தொழில்கள், கட்டுமானம், சேவைகள், வணிகம், விநியோகத் துறை தோட்டத் தொழில்கள் ஆகியவை முழுமையாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அலுவலகங்களில் 30 விழுக்காட்டு நிருவாக பணியாளர்களுக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எஞ்சியவர்கள் இல்லங்களில் இருந்து பணி செய்யலாம்.
  • எஸ்பிஎம் தேர்வுகளை அடுத்த மாதத்தில் எழுதவிருப்பவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி உண்டு.
  • ஆலய வழிபாடுகள் நடத்தப்படலாம். ஆனால் ஒருமுறைக்கு 5 பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.