Home நாடு விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்

விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்

789
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டைச் சூழ்ந்துள்ள கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ம.இ.கா, தனது மகளிர் பிரிவின் வாயிலாக மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவுக்கூடை வழங்கும் நடவடிக்கையையை முன்னெடுத்துள்ளது.

ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவின் பேரில் தேசிய ம.இ.கா மகளிர் அணி நாடு தழுவிய நிலையில் ‘மகளிர் அணியின் உணவுக்கூடை” வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வருவதாக அதன் தலைவி திருமதி உஷா நந்தினி தெரிவித்தார்.

கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலையை இழந்தனர். இதனால் வருமானம் இழந்தனர். மக்கள் பலரின் சிறுதொழில் பாதிக்கப்பட்டது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. இதனைக் கருத்தில் கொண்டு ஓரளவுக்கு மக்களின் சுமையைக் குறைக்க ம.இ.கா மகளிர் பிரிவு உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக உஷா நந்தினி சொன்னார்.

#TamilSchoolmychoice

இந்த உணவுப் பொருட்கள் நாடு தழுவிய நிலையில் இருக்கும் ம.இ.கா தொகுதித் தலைவிகள், தலைவர்கள், கிளைத் தலைவிகள், தலைவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உஷா நந்தினி குறிப்பிட்டார்.

நாடு தழுவிய நிலையில் இருந்து இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. இன்று ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமையும் நாடு தழுவிய நிலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உஷா நந்தினி தெரிவித்தார்.

இந்த கோவிட் 19 காலகட்டத்தில் மக்களுக்கான இந்த உதவிகள் தங்களின் சுமையை ஓரளவுக்கு குறைத்திருப்பதாக அதனை பெற்றுக் கொண்ட மக்கள் தெரிவித்தனர். இந்த உணவுப் பொருட்களை வழங்கிய ம.இ.கா மகளிர் பிரிவு, அதனை வழங்க ஏற்பாடு செய்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ம.இ.கா மகளிர் அணியின் இந்நடவடிக்கைக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மகளிர் அணியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தேசிய ம.இ.கா மகளிர் அணித் தலைவி திருமதி உஷா நந்தினி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.