ஏற்கனவே,மஇகா மூலமாக விக்னேஸ்வரன் 3 கொள்கலன்களை கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் நல்லுடல்களை வைக்க இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் செலாயாங் பொது மருத்துவமனைக்கு ம.இ.கா மூலமாக தொழிலதிபர் டத்தோ மூர்த்தி என்ற வணிகப் பிரமுகர் நன்கொடையாக வழங்கிய நான்காவது கொள்கலனை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அம்மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று சனிக்கிழமை (ஜூலை 17) ஒப்படைத்துள்ளார்.
அதன்படி விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொண்ட டத்தோ மூர்த்தி அதனை ம.இ.கா மூலமாக வழங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டிருந்தார். இந்நிலையில் டத்தோ மூர்த்தி தமது செலவில் நன்கொடையாக வழங்கியிருந்த அந்த கொள்கலன் நேற்று செலாயாங் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொள்கலனை தமது சொந்த செலவில் வழங்கிய நன்கொடையாக வழங்கிய டத்தோ மூர்த்திக்கு நன்றி கூறிக் கொண்ட விக்னேஸ்வரன், ம.இ.கா மூலமாக வழங்கினாலும் கொள்கலனுக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட டத்தோ மூர்த்திக்கு ம.இ.கா சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


தொழிலதிபர் டத்தோ என்.மூர்த்தி நன்கொடையாக வழங்கிய இந்த கொள்கலன் செலாயாங் மருத்துவமனையில் சவக்கிடங்கு இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ம.இ.கா ஏற்கெனவே துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு மொத்தம் 3 கொள்கலன்கள் வழங்கியுள்ள நிலையில் நான்காவது கொள்கலன் செலாயாங் மருந்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
செலாயாங் மருத்துவமனையில் கொவிட் பாதிப்புகளால் நேரும் மரணங்களைத் தொடர்ந்து இறந்தவர்களின் நல்லுடல்களை வைப்பதற்கு இங்குள்ள சவக்கிடங்கு போதிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் இந்த மருத்துவனைக்கு கொள்கலன் அத்தியாவசியாகத் தேவைப்படுகிறது என்பதை சிலாங்கூர் ம.இ.கா தலைவர் எம்.பி.ராஜா மூலமாக அறிந்த விக்னேஸ்வரன் இந்த கொள்கலனை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கொள்கலனை வழங்க ஏற்பாடு செய்த மஇகா, அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், சிலாங்கூர் ம.இ.கா தலைவர் எம்.பி.ராஜா ஆகியோருக்கு செலாயாங் மருத்துவமனை சார்பில் அதன் ஆலோசனை மன்ற உறுப்பினரும், செலாயாங் தாமான் ரிம்பா டெம்பளர் ம.இ.கா தலைவருமான ஆர்.டி.தவமணி நன்றி தெரிவித்துக் கொண்டார்.